சைஃப் அலி கான் கத்தி குத்து சம்பவத்தில் திடுக் திருப்பம்.. கொள்ளையனுக்கு வீட்டு ஊழியர் உடந்தையா?
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அதைத் தடுக்க முயன்ற சைஃப் அலி கானை அவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சைஃப் அலி கானின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த நிலையில், அதில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பாலிவுட் பிரபலம் சைஃப் அலி கானின் வீட்டில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அதைத் தடுக்க சைஃப் அலி கான் முயன்ற போது, அவரை சரமாரியாகத் தாக்கிவிட்டு கொள்ளையன் தப்பியோடியுள்ளான்.

கத்திக்குத்து காரணமாகப் படுகாயமடைந்த சைஃப் அலி கானின் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு 2.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையே போலீசார் விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.
சைஃப் அலி கான்
அதாவது கொள்ளையனை முதலில் சைஃப் அலி கானின் வீட்டில் வேலை செய்து வந்த ஊழியர் தான் பார்த்துள்ளார். கொள்ளையனைப் பார்த்தவுடன் ஊழியர் பயத்தில் கத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டே சைஃப் அலி கான் வெளியே வந்துள்ளார். அப்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வர சைஃப் அலி கான் முயன்றுள்ளார். அப்போது தான் எதிர்பாராத விதமாகக் கொள்ளையன் சைஃப் அலி கானை தாக்கவே, இவரும் தற்காப்பிற்குச் சண்டையிட்டுள்ளார்.
இதில் தான் சைஃப் அலி கான் உடலில் காயம் ஏற்பட்டது. மொத்தம் ஆறு இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்ட சூழலில், அதில் இரு காயங்கள் ஆழமாக இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு காயம் முதுகுத் தண்டிற்கு மிக அருகே ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சைஃப் அலி கானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சூழலில், அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 10க்கும் மேற்பட்ட தையலும் போடப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி:
இது மும்பையில் பணக்காரர்கள், பிரபலங்கள் வசிக்கும் பாந்த்ரா பகுதியில் நடந்துள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு, செக்யூரிட்டி பொதுவாகவே அதிகமாக இருக்கும். அப்படியிருக்கும் போது கொள்ளையனை எப்படி சைஃப் அலி கான் வீட்டில் நுழைந்தான் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
சிசிடிவி கேமரா காட்சிகளில் சம்பவம் 2.30 மணிக்கு நடந்தச் சூழலில் அதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வரை, வீட்டின் வளாகத்திற்குள் யாரும் நுழைவது போலப் பதிவாகவில்லை. இதனால் நேற்றிரவு அந்த கொள்ளையன் வீட்டில் புகுந்து பதுங்கி இருகாலம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஊழியருக்கு தெரியுமாம்:
சைஃப் அலி கான் வீட்டில் வேலை செய்து வந்த ஒருவருக்குக் கொள்ளையனுக்கும் பழக்கம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஊழியரே கொள்ளையனை வீட்டிற்குள் விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த ஊழியரை இப்போது தடுப்புக்காவலில் வைத்துள்ள போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் மீது சாடல்:
இதற்கிடையே மும்பையில் சட்ட ஒழுங்கு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக அம்மாநில அரசை தாக்கரே சிவசேனா கட்சியின் எம்பி பிரியங்கா சதுர்வேதி சாடியுள்ளார்., "மும்பையில் மீண்டும் ஒரு முக்கிய புள்ளியைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்துள்ளது. சைஃப் அலிகான் மீதான தாக்குதல் மும்பை போலீசார் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநில சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது" என்று சாடியுள்ளார். அதேபோல அங்குள்ள காங்கிரஸ், சரத் பவார் என்சிபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளது.












Click it and Unblock the Notifications