கூடுதல் அமைச்சர் பதவிகளுக்கான நாடகம்... யாரும் நம்பாதீங்க... : சிவசேனா- பாஜக மோதல் குறித்து காங்.
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக -சிவசேனா இடையே ஆட்சி அமைப்பது குறித்து மோதல் என்பது அதிகாரத்துக்கான நாடகம்தான் என சாடியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிரூபம்.
பாஜக- சிவசேனா இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது. பாஜக ஆதரவு இல்லாமலேயே ஆட்சி அமைப்போம் எனவும் மிரட்டுகிறது சிவசேனா.
சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் நவம்பர் 7-ந் தேதிக்குள் ஆட்சி அமைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் சூழல் இருக்கிறது.

சிவசேனாவுக்கு காங்கிரஸில் எதிர்ப்பு
அதேநேரத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. அக்கட்சியின் மூத்த தலைவரும் சிவசேனாவில் இருந்து காங்கிரஸுக்கு தாவியவருமான சஞ்சய் நிரூபம் உள்ளிட்டோர் இந்த எதிர்ப்பை முன்வைக்கின்றனர்.

என்னது சிவசேனாவுக்கு ஆதரவா?
இது தொடர்பாக சஞ்சய் நிருபம் தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: பாஜக- சிவசேனா இடையேயான மோதல் என்பது நாடகமே என்கிற கருத்தில் உறுதியாக இருக்கிறேன். பாஜக-சிவசேனா நாடகத்தில் காங்கிரஸ் கட்சி சிக்கிவிடாமல் ஒதுங்கியே இருக்க வேண்டும்.

தற்காலிக நாடகம்
பாஜக, சிவசேனா இடையே மோதல் என்பது போலியானது. கூடுதல் அதிகாரத்தை, அமைச்சர்களைப் பெற நடத்தப்படுகிற ஒரு தற்காலிக நாடகம் இது.

பாஜக சிவசேனா கைகோர்க்கும்
பாஜகவும் சிவசேனாவும் மீண்டும் இணைந்து கொள்ளும். அப்போது இரு கட்சிகளுமே சேர்ந்து நம்மை விமர்சிக்கும். சில காங்கிரஸ் தலைவர்களால் மட்டும் சிவசேனாவை ஆதரிக்கலாம்? என எப்படித்தான் சிந்திக்க முடிகிறதோ? இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறியுள்ளார். இதே கருத்தை முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சுஷில்குமார் ஷிண்டேவும் கூறியுள்ளார்

வேணுகோபாலுடன் ஆலோசனை
அதேநேரத்தில் காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதியை அசோக் சவாண் தலைமையிலான மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிட ம் பேசிய அசோக் சவாண், கூட்டணி கட்சிகளுக்கு அளித்த வாக்குறுதியை பாஜக மீறிவிட்டது. அதுதான் பிரச்சனைக்கே காரணம். தற்போது நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விரைவில் உரிய முடிவெடுப்போம் என கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியாகத்தான்..
மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சித் தலைவர் பாலா சாகேப் தொரட் கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை எந்த வியூகமும் வகுக்கவில்லை. நாங்கள் நடப்பதை கவனித்துக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சி வரிசையில் உட்காருவதற்கு எங்களுக்கு மக்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள். பாஜகவும் சிவசேனாவும் யாருக்கு அதிக அதிகாரம் என்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

தேசியவாத காங். நிலை
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார், எங்களுக்கு மக்கள் அளித்த தீர்ப்பு எதிர்க்கட்சி வரிசை என்பதுதான். அதில்தான் நாங்கள் அமருவோம். பாஜகவும் சிவசேனாவும் ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அப்படி பெரும்பான்மையை அந்த கட்சிகள் நிரூபிக்காத நிலையில் ஆட்சி அமைப்பது குறித்து நாங்கள் முயற்சிப்போம் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications