சீரம் நிறுவன தீவிபத்தால் ரூ 1000 கோடி நஷ்டம்.. கோவிஷீல்டு மருந்துகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தீ விபத்தால் ரூ 1000 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கொரோனா தடுப்பு மருந்து தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கோவிஷீல்டு மருந்து தயார் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் நேற்று முன் தினம் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானார்கள். இதையடுத்து தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தீவிபத்து
அப்போது அவர் கூறுகையில் ஒட்டுமொத்த உலகத்திற்கே கோவிட் தடுப்பு மருந்து முக்கியமானது. சீரம் நிறுவனத்தில் தீ விபத்து என்றவுடன் ஒரு வினாடி இதயமே நின்றுவிட்டது. பின்னர் தீவிபத்து நடந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போதுதான் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் இடத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது என்றார்.

தயாரிப்பு பணி
அப்போது உடனிருந்த சீரம் நிறுவனத் தலைவர் ஆதர் பூனவாலா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் தீவிபத்து காரணமாக கொரோனா தடுப்பு மருந்துக்கு பாதிப்பு இல்லை. சம்பவம் நடந்த கட்டடத்தில் இருந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நடந்து வருகின்றன.

காசநோய்
ஆனால் விபத்து நடந்த இடத்தில் காசநோய்க்கும் ரோட்டா வைரஸுக்கும் தடுப்பு மருந்துகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அந்த தடுப்பு மருந்துகள் சேதமடைந்தன. இந்த தீவிபத்தால் எங்களுக்கு ரூ 1000 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

சீரம் நிறுவனத் தலைவர்
எங்களது புதிய தயாரிப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோவிட் தடுப்பு மருந்துகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வருங்காலத்திற்காக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் பகுதிதான் பலத்த சேதமடைந்தன. இறந்தவர்கள் எலக்ட்ரிக்கல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் என சீரம் நிறுவனத் தலைவர் பூனவாலா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications