பெரிய ட்விஸ்ட்! நம்பி அனுப்பிய சிவசேனா.. காலை வாரிய ரவீந்திர பாதக்! தாக்கரேவுக்கு செம ஷாக்.. பரபர
மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் உச்சமடைந்துள்ள நிலையில், தூது சென்ற ஒருவரே கட்சி மாறிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
மகாராஷ்டிரா அரசியல் நொடிக்கு நொடி பல திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஷிண்டே லேசாகத் தொடங்கி வைத்து தீ இப்போது ஆளும் மகா விகாஸ் அரசையே எரித்து சாம்பல் ஆக்கும் சூழல் உருவாகி உள்ளது.
ஆளும் மகா விகாஸ் கூட்டணி அரசு கவிழ்வது உறுதி என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்து! அது எப்போது கவிழும் என்பதே இப்போது இருக்கும் ஒரே கேள்வி..

சிவசேனா
அத்தனையையும் தொடங்கி வைத்தவர் சிவசேனா மூத்த தலைவரும் அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான ஷிண்டே. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் திடீரென மாயமானார். முதலில் அவருக்கு 20 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், ஒவ்வொரு நாளும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

தூது சென்ற
இறுதியாக நேற்றிரவு சுமார் 50 எம்எல்ஏக்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாக ஷிண்டே கூறி உள்ளார். இதற்கிடையே தாக்கரே தரப்பில் இருந்து சமாதானம் பேசத் தூது சென்ற ஒருவரே ஷிண்டே அணியில் இணைந்த சம்பவம் முன் அரங்கேறி உள்ளது. இது தொடர்பான தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது. ஷிண்டே உடன் பேச்சுவார்த்தை நடத்த ஜூன் 21இல் சூரத்துக்கு முதல்வர் உத்தவ் தாக்கரேவால் அனுப்பப்பட்டவர் சிவசேனா எம்எல்சி ரவீந்திர பாதக்.

தாவினார்
சமாதான முயற்சிகள் வெற்றிபெறாத நிலையில், இரு நாட்களாக கவுஹாத்தியில் தங்கி இருந்த ரவீந்திர பாதக், நேற்றைய தினம் ஷிண்டே முகாமில் ஐக்கியமானார். அவருடன் மேலும் இரு எம்எல்ஏக்கலும் ஷிண்டே பக்கம் சாய்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர் மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள திக்ராஸ் தொகுதி சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் ரத்தோட். மற்றொரு எம்.எல்.ஏ மாலேகான் வெளி தொகுதியின் தாதாஜி பூஸ் ஆவர்.

ரவீந்திர பாதக்
ரவீந்திர பாதக் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உடன் சூரத்தில் இருந்து கவுஹாத்திக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தங்கியுள்ள ராடிசன் புளூ ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். சஞ்சய் ரத்தோட் அதிருப்தியாளர் முகாமில் சேர்ந்து உள்ள நிலையில், அவரது மனைவி ஷிடல் ரத்தோட்டிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஷிண்டே
ஷிண்டேவுக்கான ஆதரவு என்பது ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் தான் வெறும் ஓரிரு நாட்களில் ஷிண்டே ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தங்களுக்கு சிவசேனா மீது பிரச்சினை இல்லை என்று தொடர்ந்து கூறும் இவர்கள், என்சிபி-காங்கிரஸ் கூட்டணியில் தான் இவர்களுக்குப் பிரச்சினை உள்ளதாகவும் அதை உடனடியாக முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

40 பேர்
இப்போது ஷிண்டே தரப்பிற்கு சுமார் 40 சிவசேனா எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. சிவசேனா கட்சிக்கு மொத்தம் 56 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அவர்களில் 2/3 பங்கு ஆதரவு எம்எல்ஏக்கள் ஆதரவு இப்போது ஷிண்டே தரப்புக்கு உள்ளது. இதன் மூலம், சிவசேனாவில் இருந்து விலகுவதாக ஏக்நாத் ஷிண்டேவால் அறிவிக்க முடியும், மேலும் அவர்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்எல்ஏ அந்தஸ்தை இழக்க மாட்டார்கள்.












Click it and Unblock the Notifications