அதிருப்தியில் இருக்கும் சிவசேனா.. ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் அமித்ஷா மீது கோபத்தை காட்டியிருக்கு!
Recommended Video
மும்பை: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு சிவசேனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சனை அல்ல என சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. அத்துடன் லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரித்தது.
அப்போது முதல் வெளிநாட்டு செய்தியாளர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து மேற்கத்திய நாடுகளின் எம்பிக்கள் பலர் ஜம்மு காஷ்மீரில் நடப்பது என்ன, என்பது குறித்து அறிய வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

காஷ்மீர் நிலவரம்
இந்த சூழலில் மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் செல்ல அனுமதி அளித்தது. இதன் பேரில் ஐரோப்பியா நாடுகளைச் சேர்ந்த 23 எம்பிக்கள் காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணமாக கள நிலவரம் அறிய சென்றுள்ளனர்.

உள்நாட்டு விவகாரம்
இதற்கு பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசை விமர்சித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் " ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது முற்றிலும் உள்நாட்டு விவகாரம். சர்வதேச விவகாரம் அல்ல என்று இந்திய அரசு உலகம் முழுவதும் உரக்க சொல்கிறது.

இறையாண்மை
ஆனால், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களுக்கு எந்த அடிப்படையில் காஷ்மீர் சென்று கள நிலவரத்தை அறிய மத்திய அரசு அனுமதி அளித்தது? ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் காஷ்மீர் சென்றது, இந்தியாவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்கு எதிராக அத்துமீறி நுழைவதாக கருதப்படாதா?

அமித்ஷாவுக்கு கேள்வி
காஷ்மீர் பிரச்சினையை ஐநாவுக்கு கொண்டு சென்றதற்காக தொடர்ந்து நேருவை விமர்சிக்கும் போது, ஐரோப்பிய யூனியன் எம்.பிக்களுக்கு அனுமதி அளித்தது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி பிரச்சனை
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை பாஜகவுக்கு இல்லாத நிலையில் கூட்டணி கட்சியான சிவசேனா 50 50 பார்முலா கேட்டு வலியுறுத்திகோபத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் தான் பாஜகவின் மீது சிவசேனா காஷ்மீர் விஷயத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications