அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும்போது.. இன்னொரு "கோத்ரா" சம்பவம் ஏற்படும்! உத்தவ் தாக்ரே பகீர்
மும்பை: உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக நாடு முழுவதும் இருந்து மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது கோத்ரா போன்ற சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்,
கடந்த 2002ஆம் ஆண்டில் பிப்ரவரி 27ஆம் தேதி அயோத்தியிலிருந்து கர சேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் தீவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநிலம் முழுக்க மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது.

இதில் மாநிலம் முழுக்க பல நூறு பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் கட்டுக்குள் வர சில வாரங்கள் வரை ஆனது. இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான வன்முறைச் சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
உத்தவ் தாக்கரே: இதற்கிடையே மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக உத்தவ் தாக்ரே கூறியுள்ளது. முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இது குறித்து மேலும் கூறுகையில், "ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து பேருந்துகள் மற்றும் லாரிகளில் ஏராளமான மக்களை அரசை அழைத்து வர வாய்ப்பு உள்ளது. அப்போது அவர்கள் திரும்பச் செல்லும் போது கோத்ராவில் நடந்ததைப் போன்ற ஒரு சம்பவம் நிகழலாம்" என்று என்று அவர் தெரிவித்தார்.
அடுத்தாண்டு மே மாதம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக 2024 ஜனவரியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடும் சாடல்: அந்த கூட்டத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கடுமையாகச் சாடிய தாக்கரே, "மக்களை வசீகரிக்கும் தலைவர்கள் அவர்களிடம் இல்லை. இதன் காரணமாகவே சர்தார் படேல் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற ஜாம்பவான்களை அவர்கள் விழுங்கினார்கள். அப்படித்தான் இப்போது அவர்கள் பால்தாக்கரேவுக்கும் உரிமை கோர முயல்கின்றனர்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு சொந்தமாக எந்தவொரு சாதனையும் இல்லை. சர்தார் படேலுக்கு அவ்வளவு பெரிய சிலை வைப்பது முக்கியம் இல்லை. அவர் செய்தது போலச் சாதனைகளைச் செய்வது தான் முக்கியம்.. சர்தார் படேல் செய்த சாதனைகள் அருகில் கூட ஆர்எஸ்எஸ்- பாஜகவால் வர முடியாது" என்று அவர் கடுமையாகச் சாடினார்.
பின்னணி என்ன: 2019இல் நடந்த மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் என்சிபி உடன் உத்தவ் தாக்கரே கைகோர்த்தார். அப்போது முதலே முதல்வர் பதவிக்காகப் பால் தாக்கரேவின் லட்சியங்களை உத்தவ் தாக்கரே துறந்தார் என்று பாஜக தொடர்ந்து சாடி வந்தது. ஒரு கட்டத்தில் இதையே ஒரு காரணமாகச் சொல்லித் தான் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் போர்க்கொடி தூக்கினார்.
ஷிண்டே பாஜகவுடன் கைகோர்க்க உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அப்போது முதலே பாஜகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் தாங்கள் தான் பால்தாக்கரேவின் இந்துத்துவாவை பின்பற்றுவதாகத் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே நேற்று நடந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications