நிதின் கட்கரியுடன், சோனியா காந்தியின் 'வலது கரம்' அகமது பட்டேல் திடீர் சந்திப்பு.. பெரும் பரபரப்பு
மும்பை: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு, நெருக்கமானவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான, அகமது பட்டேல், திடீரென, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை, மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக நடுவே கூட்டணி அரசு அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. மற்றொரு பக்கம் சிவசேனா கட்சியோ, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. இது போன்ற பரபரப்பான சூழ்நிலைகளுக்கு நடுவே, நிதின் கட்கரியை, அகமது பட்டேல் சந்தித்து பேசியுள்ளார். இவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

மறுப்பு
இருப்பினும் மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் இழுபறி தொடர்பாக நிதின் கட்கரியுடன், ஆலோசனை நடத்தவில்லை, விவசாயிகள் பிரச்சினை பற்றிதான் பேசினேன், என்று அகமது பட்டேல் தெரிவித்துள்ளார்.

காலகட்டம்
ஆனால் அகமது பட்டேல் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் சந்தித்துள்ள இந்த காலகட்டம் என்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜகவில் அனைத்து கட்சிகளுடனும் நன்மதிப்பு பெற்றிருந்த ஒரு தலைவர் அருண் ஜேட்லி. அவரைப் போன்று நன்மதிப்பைப் பெற்றவர் நிதின் கட்கரி.

அருண் ஜேட்லிக்கு அடுத்து
அருண் ஜெட்லி மறைந்து விட்டதால் அவருக்கு பதிலாக நிதின் கட்கரியை ட்ரபிள் ஷூட்டர் அதாவது பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய நபராக, பாஜக மேலிடம் கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ்
ஆட்சி அமைக்க, நிலவும் இழுபறி பற்றி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் நேற்று மகாராஷ்டிர மாநில காபந்து முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசு அமைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து விளக்கியுள்ளார். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் கூடிய வரையில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் படி மோகன் பகவத், பட்னாவிசிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்தான் கட்கரியை, அகமது பட்டேல் சந்தித்துள்ளார்.












Click it and Unblock the Notifications