மும்பையில் போட்டியிடும் புதுக்கோட்டை "கேப்டன்"... 2-வது முறையாக எம்.எல்.ஏ.சீட்!
மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் சியோன் கோலிவாடா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பாக கேப்டன் தமிழ்ச்செல்வன் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.
மஹாராஷ்டிரா மாநிலம் சியோன் கோலிவாடா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தமிழ்ச்செல்வன். கடந்த 2014-ம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். இந்நிலையில் அவருக்கு அதே தொகுதியில் போட்டியிட இரண்டாவது முறையாக வாய்ப்பளித்துள்ளது பாஜக தலைமை. இன்று வெளியிடப்பட்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்ச்செல்வன் பெயரும் இடம்பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்,மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மிகவும் நெருக்கமானவர். தமிழ்ச்செல்வன் தனது மகள் திருமணத்தை அண்மையில் புதுக்கோட்டையில் நடத்திய போது, தேவேந்திர பட்னாவிஸ் புதுக்கோட்டைக்கே நேரடியாக வந்து மணமக்களை வாழ்த்திச்சென்றார்.
இதேபோல் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் தமிழ்ச்செல்வன் மீது மிகுந்த அன்புகொண்டவர். பொதுவாக மராட்டியம் மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்தை முன்வைத்து அரசியல் செய்பவர் உத்தவ் தாக்கரே. அப்படிப்பட்ட உத்தவ் தாக்கரே கூட தமிழரான தமிழ்ச்செல்வன் மீது எந்த வெறுப்பையும் காட்டியதில்லை. எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு முன்பே சிவசேனாவுடன் தொடர்பில் இருந்தவர் தமிழ்ச்செல்வன்.
இந்நிலையில் மீண்டும் தலைமை சீட் கொடுத்துள்ளதால், தேர்தல் பணிகளை பரபரப்பாக தொடங்கியிருக்கிறார் தமிழ்ச்செல்வன். சமுக நலப்பணிகளில் அதிக ஈடுபாடு கொண்ட தமிழ்ச்செல்வனுக்கு உதவவேண்டும் என்ற நோக்கில் தமிழர்களும், மராட்டியர்களும் ஒன்றிணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.