TCS Layoff: டிசிஎஸ்ஸில் திடீரென்று 2,500 பேர் பணி நீக்கம்.. புனே அலுவலகத்தில் என்ன நடக்கிறது? TCS தந்த விளக்கம்
மும்பை: டிசிஎஸ் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு மொத்தம் 12 ஆயிரம் பணியாளர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையி் தான் புனேவில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் இருந்து திடீரென்று 2,500 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு புகார் பறந்துள்ள நிலையில் டிசிஎஸ் மறுத்துள்ளது.
முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் தொடர்ந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் புனேவில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து சுமார் 2,500 பணியாளர்கள் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஐடி ஊழியர்கள் சங்கமான NITES (Nascent Information Technology Employees Senate) பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்பிரித் சிங் சலுஜா மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
இதுபற்றி ஹர்பிரித் சிங் சலுஜா கூறுகையில், ‛‛டிசிஎஸ்ஸில் பணி நீக்கம் தொடர்பான உத்தரவு ஏற்கனவே வந்துள்ளது. இருப்பினும் தற்போதைய கள எதார்த்தம் இன்னும் வருத்தமளிக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. ஏனென்றால் புனேவில் மட்டும், சமீபத்திய வாரங்களில் கிட்டத்தட்ட 2,500 ஊழியர்கள் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் அல்லது திடீரென நீக்கப்பட்டுள்ளனர்.
இதில், அதிகமானவர்கள் நடுத்தர மற்றும் சீனியர் லெவல் ஊழியர்கள். இவர்களுக்கு 10 முதல் 20 ஆண்டு அனுபவம் உள்ளது. 40 வயது கொண்டவர்கள் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இஎம்ஐ, குழந்தைகளின் பள்ளி கட்டணம், மெடிக்கல் செலவு, வயதான பெற்றோரை உடன் வைத்துள்ளனர். தற்போதைய போட்டி நிறைந்த சூழலில் வேலைவாய்ப்பை கண்டுபிடிப்பது அவர்களுக்கு கிட்டத்தட்ட சாத்தியமற்றது'' என்றார்.
மகாராஷ்டிரா அரசு இந்த விஷயத்தில் தலையீடு செய்ய வேண்டும். உடனடியாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் செயலாளர் மகாராஷ்டிரா அரசை தலையீடு செய்ய உத்தரவிட்டு ஊழியர்களின் நலனை பாதுகாக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை டிசிஎஸ் மறுத்துள்ளது. இதுதொடர்பாக டிசிஎஸ் சார்பில், ‛‛இங்கே சொல்லப்படும் தகவல்கள் தவறானவை. வேண்டும் என்றே இந்த தகவல் பரப்பப்படுகிறது. எங்கள் நிறுவன பணியாற்றுவோரின் திறன்களை மறுசீரமைக்கும் முயற்சியை சமீபத்தில் தொடங்கி உள்ளோம். இதில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications