தங்கதுரை எல்லாம் ஓரளவுக்கு தான்..ரூ.45 லட்சம் சம்பளம் எப்படி பத்துமாம்! சீரியஸாக புலம்பிய ஐடி ஊழியர்
மும்பை: 3 ஆண்டுகள் ஐடி துறையில் அனுபவம் கொண்ட ஒருவருக்கு ஆண்டுக்கு 45 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதாம். ஆனால், இந்த சம்பளம் குறைவு எனப் புலம்பும் அவர், இப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை.. இவ்வளவு குறைவாகச் சம்பளம் கிடைப்பதை ஏற்க முடியவில்லை என ட்வீட் செய்துள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை வேகமாக மாறி வருகிறது. நமது நாட்டில் இப்போது அதிக சம்பளத்தை வழங்கும் துறையாக ஐடி துறை இருக்கிறது. ஆனால், அங்கு வழங்கப்படும் சம்பளமே கூட போதவில்லை என பலரும் சொல்வதை நாம் பார்த்திருப்போம்.

ஐடி ஊழியர்
அப்படி தான் வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே அனுபவம் உள்ள ஐடி ஊழியர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு போஸ்ட் இணையத்தில் விவாதத்தைக் கிளப்புவதாக இருக்கிறது.
அதாவது 3 ஆண்டு அனுபவத்திற்கு பிறகும் தனக்கு ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் சம்பளத்தில் மட்டுமே வேலை கிடைத்துள்ளதாகவும் இது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால் என்ன செய்யலாம் என்று சமூக வலைத்தளங்களில் அவர் ஆலோசனை கேட்கவே அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
ரூ.45 லட்சம் தான் சம்பளம்
மெம்பர் ஆஃப் டெக்னிக்கல் ஸ்டாப் என்ற பணிக்கு அவர் தேர்வாகி இருக்கிறாராம். அதில் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் சம்பளம் மற்றும் 3 லட்சம் ரூபாய் போனஸ் கிடைக்குமாம். இதுபோக 52,000 டாலர் மதிப்புள்ள பங்குகளும் 4 ஆண்டுகளில் படிப்படியாகக் கிடைக்க ஆரம்பிக்குமாம். இது பார்க்க நல்ல ஒரு வேலை மாதிரியே தெரிகிறது.
ஆனால், இந்த வேலை தான் ஏமாற்றம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தனது தற்போதைய சம்பளத்திற்கு இணையானது.. அல்லது சில வழிகளில் பார்த்தால் குறைவாகக் கூட இருக்கும் என அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருந்து தனக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் வருவதாகப் பதிவிட்டுள்ள அவர், ஆனாலும் அதில் சேர ஆர்வம் இல்லை எனவும் பதிவிட்டுள்ளார்.
ஏமாற்றம்
அந்த நபர் மேலும், "இந்த வேலைவாய்ப்பு ஆஃபரை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? பொதுவாக எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? எனது நண்பர்கள் 6-8 மாதங்களுக்கு முன்பே 50+ பெற்றனர்.. ஆனால் இப்போது அவர்களால் இதுவே பெஸ்ட் என்று கூறுகிறார்கள்.. நான் என்ன செய்வதென்று புரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
ட்விட்டர் தளத்தில் அவரது போஸ்ட் பெரிய விவாதத்தையே கிளப்பிவிட்டது. மூன்று வருட அனுபவம் உள்ள ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகை வழங்குவதே அதிகம் என்று பலர் ஆச்சரியப்பட்டனர். அதேநேரம் இன்னும் சிலர் இது ஏமாற்றம் அளிப்பதாகவும், மார்க்கெட் முன்பு இருந்ததை விட இப்போது குறைவாக வழங்குவதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அவரது இந்த பதிவு தொழில்நுட்பத் துறை வேகமாக மாறி வருவதையே காட்டுகிறது. தற்போதைய சந்தையில் எல்லா வேலைகளுக்கும் முன்பு கிடைத்த சம்பளத்தை விட இப்போது சம்பளம் குறைந்தே வருவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். சரி நீங்க சொல்லுங்க 3 ஆண்டு அனுபவம் கொண்ட இவருக்கு இந்த சம்பளம் குறைவா.. இல்லை அதிகமா?












Click it and Unblock the Notifications