"ஆக்சிஜன் பற்றாக்குறை.. மோடிக்கு ஃபோன் செஞ்சோம்.. ஆனா பிரசாரத்துல இருக்காருன்னு கட் பண்ணிட்டாங்க"
மும்பை: ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை நிலவுவது குறித்து பிரதமருடன் தொடர்புகொள்ள முயன்றதாகவும் ஆனால் மேற்கு வங்கத்தில் பிரசாரத்தில் இருந்ததால் மோடி பேச மறுத்துவிட்டார் என்று மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் தற்போது உச்சத்தில் உள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தினசரி கொரோனா பாதிப்பு அங்கு அதிகமாக உள்ளது.
தினமும் அங்கு சுமார் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை
இதன் காரணமாக மாநிலத்தில் சில இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னதாக நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தேவைக்கு ஏற்றப்படி ஆக்சிஜன் சிலிண்டர்களின் உற்பத்தியை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

மோடியுடன் பேச முடியவில்லை
இந்நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்கப் பிரதமர் மோடியுடன் தொலைப்பேசி வழியாக தொடர்புகொள்ள மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே முயன்றதாக அம்மாநிலத்தின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்தார். இருப்பினும், பிரதமர் மோடி மேற்கு வங்க தேர்தலுக்குப் பிரசாரத்தில் இருப்பதாகவும் இதனால் இப்போது பேச முடியாது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் நவாப் மாலிக் கூறினார்.

திரிணாமுல் விமர்சனம்
மேலும், பொதுமக்கள் கொரோனா காரணமாக உயிரிழந்து வருகிறார்கள். இருப்பினும், பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக உள்ளார் என்றும் நவாப் மாலிக் விமர்சித்தார். இது குறித்து திரிணாமுல் மூத்த தலைவர் டெரிக் ஓ ப்ரைனும் விமர்சித்துள்ளார். ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்கத் தொடர்புகொண்டு உத்தவ் தாக்க்ரேவுடன் பிரதமர் பேசாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகம்
இருப்பினும், நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டுகளுக்குப் பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது. பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை நாட்டில் தற்போதுள்ள ஆக்சிஜன் சப்ளே மற்றும் தேவை குறித்து ஆலோசனை நடத்தி தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்தார் எனப் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இதில் மாநில அரசுகளுடன் தொடர்பில் இருக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியூஷ் கோயல்
ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலும் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். ஆக்சிஜன் தொடர்பான விஷயத்தில் மராட்டிய முதல்வரின் செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாகவும் நாட்டில் ஆக்சிஜன் சப்ளே அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்திற்குத் தான் அதிகபட்ச ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications