மும்பையில் தொடர்ந்து குறையும் பாதிப்புகள்.. மகிழ்ச்சியில் மருத்துவர்கள்.. தாக்கரே சாதித்தது எப்படி?
மும்பை: மும்பையில் தொடர்ந்து உச்சத்தில் சென்று கொண்டிருந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக கணிசமாக குறைந்துள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா 2-வது அலை மிக வேகமாக உருவெடுத்தது. அங்கு தினமும் 55,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உயிரிழப்புகளும் கட்டுக்கடங்காமல் சென்றது.
அதுவும் தலைநகர் மும்பையில் நிலைமை கைமீறி சென்றது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் தினமும் 11,000-க்கும் மேல் தினசரி பாதிப்புகளை கொண்டிருந்த மும்பை நகரம் தற்போது 6,000-க்கும் குறைவான பாதிப்புகளை பெற்று வருவது சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.

குறையும் பாதிப்பு
அதாவது ஏப்ரல் தொடக்கத்தில் ஒவ்வொரு நாளும் 10,000 முதல் 11,000 புதிய பாதிப்புகளை மும்பை சந்தித்து வந்தது. அப்போது தினசரி பாஸிட்டிவ் விகிதம் 20 முதல் 30 சதவீதம் வரை இருந்தது. தற்போது ஆறுதல் அளிக்கும் படியாக கடந்த 3 நாட்களில்மும்பையின் தினசரி பாதிப்பு 6,000-க்கும் குறைவாக உள்ளது. அதாவது சராசரி பாஸிடிவ் விகிதம் 14.6 சதவீதம், 13.75 சதவீதம் மற்றும் 9.1 சதவீதம் ஆக குறைந்துள்ளது.

3,876 பாதிப்புகளே
கடந்த திங்கள்கிழமை அன்று மும்பையில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இந்த மாதத்தில் முதல் முறையாக 4,000 க்கும் கீழ் குறைந்தது. சுமார் 3,876 பாதிப்புகளே பதிவு செய்யப்பட்டு உள்ளதால், தொற்று எந்த அளவுக்கு கீழே குறைந்துள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். மும்பையில் திங்கள் அன்று நடத்தப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மற்ற நாட்களை விட குறைவாகவே இருந்தது.

காரணம் என்ன?
மும்பையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதற்கு மகாராஷ்டிரா அரசு அமல்படுத்தி உள்ள முழு ஊரடங்கே காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். ஏப்ரல் 14 முதல் மும்பையில் மிக நெருக்கமாக மக்கள் பயணிக்கும் புறநகர் ரயில்களில் அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத வகையில் கட்டுப்பாடுகளை கடுமையாக இறுக்கியதால் இந்த நிலைக்கு வந்துள்ளதாக மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

விரைவான பரிசோதனை
இது தொடர்பாக மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சிலின் தலைவர் டாக்டர் சிவகுமார் உத்துர் கூறுகையில், "ஒரு ஊரடங்கு மருத்துவ மற்றும் பொருளாதாரம் என இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது. மருத்துவ அம்சத்திலிருந்து இதைப் பற்றி நான் பேசுகிறேன். நாங்கள் ஒரு முழு ஊரடங்குக்கு அழைப்பு விடுத்தோம். அரசும் இதை செய்தது. அதன் பிறகு தற்போது பாதிப்புகள் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் விரைவான பரிசோதனையும், நோயுள்ளவர்களை உடனடியாக தனிமைப்படுத்துதலும் தொற்றை குறைக்க உதவியது என்றார்.












Click it and Unblock the Notifications