மகாநதி படம் மாதிரியே.. ''9 ஆண்டுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த சிறுமி''.. மும்பையில் நெகிழ்ச்சி!
மும்பை: கடந்த 2013-ம் ஆண்டு கடத்தப்பட்ட சிறுமி பழைய போஸ்டர் மூலம் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பெற்றோருடன் இணைந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அந்தேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவள் சிறுமி பூஜா. 9 வயதான அவள் தனது சகோதரனுடன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தாள்.
வழக்கம் போல் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி சிறுமி பூஜா தனது சகோதரருடன் காலையில் பள்ளிக்கு கிளம்பி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

குழந்தையில்லாததால். .
அப்போது அந்த வழியாக வந்த ஹென்றி ஜோசப் டிசோசா என்பவர் ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பது போல் ஏமாற்றி சிறுமி பூஜாவை கடத்தி சென்றார். இதற்கிடையே பள்ளிக்கூடத்துக்கு போன பிள்ளையை காணவில்லையே என பூஜாவின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். மேலும் இது குறித்து அவர்கள் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தது மட்டுமல்லாமல் பூஜாவை காணவில்லை என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். ஆனால் சிறுமி பூஜா அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையே ஹென்றி ஜோசப் டிசோசாவுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், அவர் பூஜாவை கடத்தியுள்ளார்.

சிறுமியின் பெயரை மாற்றினார்
மேலும் பூஜாவை தனது மகளாக நினைத்து அவர் வளர்த்துள்ளார். மும்பையிலேயே இருந்தால் பூஜாவை அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக அவர் கர்நாடகாவுக்கு குடிபெயர்ந்துள்ளார். மேலும் பூஜாவை ஒரு பள்ளி விடுதியில் தங்க வைத்து படிக்க வைத்துள்ளார். இதற்காக சிறுமி பூஜாவின் பெயரையும் அவர் டிசோசா என மாற்றியுள்ளார். பள்ளி விடுதியில் தங்கி படித்தாலும் சிறுமி பூஜா வீட்டிற்கு அவ்வப்போது வருவது வழக்கம். அப்போது அவளை கடத்திய தந்தையான ஹென்றி ஜோசப் டிசோசா ஆரம்பத்தில் அவளுடன் பாசமாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் நீண்ட நாட்கள் கழித்து ஹென்றி ஜோசப் டிசோசாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.

நீ நான் பெற்ற பிள்ளை இல்லை
இதையடுத்து அந்த தம்பதியினர் கடத்தி கொண்டு வந்த பூஜாவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். மொத்த பாசத்தையும் அவர்களுக்கு பிறந்த குழந்தை மீதே வைத்துள்ளனர். சிறுமி பூஜாவை வீட்டு வேலை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். இதனால் சிறுமி பூஜா மனமுடைந்து காணப்பட்டாள். இதற்கிடையே ஒரு நாள் குடித்து விட்டு வந்த ஹென்றி ஜோசப் டிசோசா சிறுமி பூஜாவை 'நீ நான் பெற்ற பிள்ளை இல்லை' . என்று கூறி திட்டிவுள்ளார். இதனால் சிறுமி பூஜா தான் யார் என்று நினைவு கூர முயற்சித்தார். இதற்காக தனது சக தோழிகளிடமும் விசாரிக்க கூறினார்.

2013-ம் ஆண்டு போஸ்டர்
அப்போது இவர்கள் இணையத்தளத்தில் பூஜா காணவில்லை என தேடி உள்ளனர். இதில் 2013-ம் ஆண்டு இது போன்ற போஸ்டர் அவர்களுக்கு கிடைத்துள்ளது. ஆனால் அந்த போஸ்டரில் போன் நம்பர் முழுவதும் இல்லை. பாதி எண்கள் தான் இருந்தது. இதனால் என்னசெய்வதென்று யோசித்த நிலையில், அந்த போஸ்டரை வீட்டில் வேலை பார்த்து வந்த ஒருவரிடம் காட்டியுள்ளார். நல்ல வேளையாக சிறுமி வேலை பார்த்து கொண்டிருந்த வீட்டில் உள்ளவர் உன் அம்மாவை எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். இதனால் மனம் பூரித்து போன சிறுமி தன் அம்மாவை பார்க்க ஆசையோடு காத்திருந்தாள்.

9 ஆண்டுகளுக்கு பிறகு. .
அதன் படி அந்த நபர் சிறுமி பூஜாவையும் அவளது தாயையும் வீடியோ கால் மூலமாக பேச வைத்துள்ளார். 2013-ம் ஆண்டு தொலைந்து போன சிறுமி கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து பெற்ற தாயுடன் பேசியதும் பூஜா அழுதுவிட்டார். இருவரும் கண்ணீர் மழையில் நனைந்தபடி ஆனந்தத்துடனும், ஏக்கத்துடனும் பேசி மகிழ்ந்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில் சிறுமி பூஜாவின் தந்தை இறந்துள்ளார். எனினும் சிறுமி பூஜா பெற்ற தாய் மற்றும் சகோதரனுடன் 9 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்தனர். இது குறித்து போலீசாருக்கு தெரியவர சிறுமியை கடத்தியதாக ஹென்றி ஜோசம் டிசோசா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பழைய போஸ்டர் மூலம் 9 ஆண்டுகளுக்கு பிறகு சிறுமி பெற்றோரை அடைந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications