மும்பையில் ஒரு திருப்பாச்சி திருடன்.. அசிங்கமா போச்சு குமாரு!
மும்பை: மும்பை புறநகர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதிய சமயத்தில் திருடன் ஒருவன் பெண்ணின் ஹேண்ட் பேக்கை திருடுவதற்குப் பதிலாக தலைமுடியை வெட்டிக் கொண்டு தப்பியோடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பாச்சி திரைப்படத்தில் விஜய் தனது தங்கைக்காக இளம் பெண் தலைமுடியை வெட்டப்போய், அவரது தாய் தலைமுடியை வெட்டிய கதை போல மாறிவிட்டது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் திருப்பாச்சி. அண்ணன், தங்கையின் பாசத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நீண்ட முடி வைத்திருக்கும் தோழி ஒருவர் விஜயின் தங்கையின் தலைமுடி குறித்து கேலி செய்வார். இதனால், கடுப்பாகும் தங்கை அண்ணனிடம் சென்று இதுகுறித்து முறையிடுவார்.

இதையடுத்து, தோழியின் முடியை வெட்ட முடிவெடுக்கும் விஜய், அவரது வீட்டில் இரவு நேரத்தில் குதித்து முடியை வெட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்பி தனது தங்கையிடம் தலைமுடியைக் கொடுத்துவிட்டு வெற்றிக் களிப்போடு இருப்பார்.
அடுத்தநாள் தான் ட்விஸ்டே. தோழியின் முடிக்கு பதிலாக அவரது அம்மாவின் முடியை வெட்டியிருப்பார் விஜய். இந்த காமெடி காட்சிபோல மும்பை புறநகர் ரயில் நிலையத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மும்பை ரயில் நிலையத்தில் பெண்ணின் ஹேண்ட் பேக்கை கட் செய்வதற்குப் பதிலாக அவரது தலைமுடியை வெட்டிவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று திருடன் ஓடிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பை புறநகர் ரயிலில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பல்வேறு பணிகளுக்காகச் சென்று வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடுவதால் அப்பகுதியில் திருடர்களும் பயணிகளோடு பயணிகளாக பயணம் செய்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதும் வழக்கம். தினந்தோறும் புறநகர் ரயிலில் ஏராளமான செல்போன்கள் திருட்டு போகின்றன.
மும்பையில் உள்ள போரிவலி பகுதியைச் சேர்ந்தவர் நிதர்சனா (42). இவர் தாதர் ரயில் நிலையத்தில் இரவு 9.10 மணிக்கு நடைமேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு பொதுமக்களின் கூட்டம் அலைமோதியுள்ளது. நிதர்சனா ஒரு பேக்கை தன் தோளில் மாட்டியிருந்துள்ளார். அந்த பேக் முதுகுப் பக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில், நிசர்சனாவை பின்புறம் யாரோ அடிப்பது போன்று தெரிந்துள்ளது. உடனடியாக அவர் திரும்பிப் பார்த்தபோது, அருகில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு நபர் தப்பியோடியுள்ளார். கூட்டநெரிசலில் அந்த நபரை நிதர்சனாவால் அடையாளம் காணமுடியவில்லை.
இதையடுத்து, தனது பேக்கை பார்த்தபோது அப்படியேதான் இருந்துள்ளது. பேக்கிலிருந்தும் எந்தப் பொருளையும் அவன் எடுக்கவில்லை. அப்போதுதான் அவரது முடி வெட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. திருடன் பேக்கை வெட்டுவதற்கு பதில் அவசரத்தில் தவறுதலாக முடியை வெட்டியுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிதர்சனா உடனடியாக அங்கிருந்த ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, நடைமேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது திருடன் தப்பியோடிய காட்சி பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. திருடன் பேக்கை வெட்டுவதற்கு சிறிய அளவிலான கத்திரிக்கோல் பயன்படுத்தி இருக்கலாம் என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.தப்பியோடிய திருடன் மீது ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications