யார் நிஜ ”இந்துத்துவா”? பதவி விலகலுக்கு முன் "யோகி" வழியில் உத்தவ் தாக்கரே போட்ட உத்தரவு
மும்பை: சிவசேனா எம்.எல்.ஏக்கள் 40 பேர் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவிலிருந்து நேற்று விலகினார். அதற்கு முன்பாக சிவசேனா ஒரு இந்துத்துவ கட்சிதான் என்பதை மீண்டும் நிறுவும் வகையில் 2 முக்கிய நகரங்களின் பெயர்களை அவர் மாற்றி இருக்கிறார்.
Recommended Video
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 288 இடங்களில் பாஜகவுக்கு 106 இடங்கள் கிடைத்தன. பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

பாஜகவின் சதி
சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.

இந்துத்துவ கொள்கை
சிவசேனா ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அதன் இந்துத்துவ கொள்கையிலிருந்து விலகி காங்கிரஸ் சொல்வதை கேட்டு வருவதாக பாஜக குற்றம்சாட்டி வந்தது. பாஜகவினர் மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் கைது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் போன்றவை சிவசேனா கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மறுபக்கம் நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவும் அனுமன் சலிசா சர்ச்சையை கொண்டு வந்து சிவசேனா இந்துத்துவ கொள்கையிலிருந்து தடம் புரண்டுவிட்டதாக குற்றம்சாட்டினார்.

அணி தாவல்
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 3 நாட்களில் மட்டும் மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 40 ஆக அவர்களின் பலம் அதிகரித்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம்
அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 23 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சிவசேனா கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார். இந்த நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி ஜூன் 30 மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

உத்தவ் தாக்கரே பதவி விலகல்
ஆளுநரின் நோட்டீசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தனது கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்ட உத்தவ் தாக்கரே, சட்டசபையில் போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

யோகி ஸ்டைலில் கடைசி உத்தரவு
தனது ராஜினாமா அறிவிப்புக்கு முன்பாக கடைசி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டிய உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் மன்னர் மீஸ் உஸ்மான் அலி பெயரில் இருந்த உஸ்மானாபாத் நகரத்தின் பெயரை தாராஷிவ் என்றும் முகலாய பேரரசர் அவுரங்கசீப் பெயரில் இருந்த அவுரங்காபாத் என்ற நகரத்தின் பெயரை சம்பாஜிநகர் நகர் எனவும் மாற்றினார்.

உத்தவ் சொல்லும் செய்தி
தனது தந்தை பால் தாக்கரேவின் நீண்ட நாள் விருப்பமாக இருந்த நகரங்களின் பெயர் மாற்றத்தை கடைசியாக நிறைவேற்றியதன் மூலம், தான் இன்னும் பால் தாக்கரேவின் இந்துத்துவ கொள்கையிலேயே இருக்கிறேன் என்பதை உணர்த்தி சென்றிருக்கிறார் உத்தவ் தாக்கரே. இதற்கு முன்பாக உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் நகர பெயரை பிரயாக்ராஜ் என்று யோகி ஆதித்யநாத் மாற்றியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications