மகாராஷ்டிரா: பாஜகவுடன் கை குலுக்கும் உத்தவ் தாக்கரே சிவசேனா. முதல்வர் பட்னாவிஸுக்கு செம்ம பாராட்டு!
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜகவுடன் மீண்டும் கை கோர்ப்பதற்கான சிக்னல்களை உத்தவ் தாக்கரே சிவசேனா வெளிப்படுத்தி வருகிறது. 10 மாவோயிஸ்டுகள் சரணடைந்த விவகாரத்தை முன்வைத்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை புகழ்ந்து எழுதியிருக்கிறது உத்தவ் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா. முதல்வர் பட்னாவிஸை புகழ்ந்து எழுதியிருப்பது சரியானதுதான் என விளக்கமும் அளித்திருக்கிறார் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.
மகராஷ்டிராவில் காங்கிரஸ், சரத்பவார் தேசியவாத காங்கிரஸை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரே இணைந்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா மிக மோசமான தோல்வியைத் தழுவியது.

இதனையடுத்து மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் மீண்டும் கை கோர்க்க விரும்புகிறது உத்தவ் தாக்கரே சிவசேனா. இதற்கு முன்னோட்டமாக விரைவில் நடைபெற உள்ள மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா தனித்துப் போட்டியிடக் கூடும் எனவும் கூறப்பட்டு வருகிறது. இதனிடையே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பின்னணியில் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை புகழ்ந்து கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி மாவட்டத்தில் 10 மாவோயிஸ்டுகள் சரணடைந்ததை முன்வைத்து பட்னாவிஸுக்கு சாம்னா பாராட்டு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், மகாராஷ்டிரா எங்கள் மாநிலம். எங்கள் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் அடக்கப்பட்டால் பாராட்டுவது எங்கள் கடமை. தற்போது 10 மாவோயிஸ்டுகள், ஆயுதப் பாதையைக் கைவிட்டு இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். இதனை பாராட்டுகிறோம். பிரதமர் மோடியை நாங்கள் விமர்சிக்கிறோம். அதே நேரத்தில் சில நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். அதேபோலத்தான் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நாங்கள் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் பொறுப்பான எதிர்க்கட்சியாக மக்கள் பிரச்சனைகளை முன்வைக்கவும் செய்வோம். இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications