Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட் கொடுத்த ஷாக்.. 20 ஆண்டுகளுக்கு பிறகு கை கோர்த்த உத்தவ், ராஜ் தாக்ரே!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கடும் தோல்வியடைந்தது. இந்நிலையில் மும்பை உள்ளாட்சி தேர்தலுக்கு உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே சேர்ந்து களமிறங்க உள்ளதாக அறிவித்திருக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு பின்னர் இவர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஒரு காலத்தில் சிவசேனாதான் எல்லாம். ஆனால், இக்கட்சியிலிருந்து ஷிண்டே பிரிந்து சென்ற பிறகு எல்லாம் தலைகீழாக மாறியிருக்கிறது.

Uddhav Raj Thackeray BJP

கடும் பின்னடைவு

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக மகாராஷ்டிராவை தன் வசப்படுத்தியிருக்கிறது. ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான என்சிபி குறைவான இடங்களே பெற்றிருக்கிறது. மறுபுறம் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான என்சிபி விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இடங்களை பிடித்திருந்தன. இந்த தோல்வி காங்கிரஸ் தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த பின்னடைவை சரிகட்ட தற்போது உத்தவ் பால் தாக்கரே பிரிவு சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஒன்றிணைந்துள்ளனர். மும்பை உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட உள்ளன.

மராத்தியர்கள்

இன்று காலை, உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே தங்கள் குடும்பத்தினருடன் சிவாஜி பூங்காவில் உள்ள பால் தாக்கரேவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராஜ் தாக்ரேவின் வீட்டிற்கு சென்று, அவரது தாயாரிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றார் உத்தவ் தாக்கரே. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "நான் அனைத்து மராத்தி மக்களுக்கும் அறிவுறுத்துகிறேன். இப்போது தவறு செய்தால் அழிந்து போவீர்கள். இப்போது நீங்கள் பிரிந்தால், முற்றிலுமாக அழிக்கப்படுவீர்கள். எனவே பிரியாதீர்கள், பிளவுபடாதீர்கள், மராத்திப் பெருமையை வீணாக்காதீர்கள். ஒரு மராத்தி நபர் பொதுவாக யாருடைய வழியையும் பின்பற்ற மாட்டார். ஆனால் யாராவது அவரது வழியில் வந்தால், அவர்களைத் திரும்பிப் போக விடமாட்டார்.

தாக்கரேக்களின் போராட்டம்

நாம் ஒன்றிணைவது நமது கடமை. மராத்தி மக்கள் தியாகம் செய்து மும்பையை மகாராஷ்டிராவிற்குள் கொண்டு வந்தனர். இதை இன்று நினைவுகூர்வது இயல்பு. எங்களின் இரண்டு தாத்தாக்களில் ஒருவரான பிரபோதங்கர் தாக்கரே, ஒருங்கிணைந்த மகாராஷ்டிராவிற்கான போராட்டத்தில் முதல் ஐந்து தளபதிகளில் ஒருவராவார். எனது தந்தை பால்தாக்கரே, ராஜ்ஜின் தந்தை ஸ்ரீகாந்த் தாக்கரே, அதாவது முழு தாக்கரே குடும்பமுமே அப்போதைய மும்பைக்காகப் போராடியது.

மும்பை கிடைத்தது. அதன் பின்னரும் நியாயமான உரிமைகளுக்காக பால்தாக்கரே சிவசேனாவை உருவாக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட ஆண்டுகள் நன்றாக நகர்ந்தன. ஆனால் இன்று, டெல்லியில் உள்ள இருவரின் நோக்கம், மும்பையை கைப்பற்றுவதாக உள்ளது.

மும்பை தேர்தல்

நாங்கள் இப்போது தொடர்ந்து சண்டையிட்டால், அது மும்பையில் உள்ள தியாகிகள் நினைவிடத்திற்கு அவமானமாகும். இன்று, எங்கள் கடமைக்காகவும், ஒன்றாக வாழவும் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். இனிமேல், யாரும் மும்பையையும் மகாராஷ்டிராவையும் ஒரு வக்கிரமான பார்வையாலோ அல்லது வஞ்சகமான சூழ்ச்சிகளாலோ பிரிக்க முயற்சிக்க மாட்டார்கள். மும்பையைப் பிரிக்க முயற்சிப்பவர்கள் அரசியலில் அகற்றப்படாமல் இருக்க மாட்டார்கள் என்று நாங்கள் ஒரு சபதம் எடுத்து களமிறங்கியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

யார் இந்த தாக்கரேக்கள்?

மகாராஷ்டிராவில் சிவசேனாவை நிறுவியது பால் தாக்கரேதான். அவருடைய தம்பி மகன்தான் ராஜ் தாக்கரே. ஆனால், தம்பி மகனாக இருந்தாலும், ராஜ் தாக்கரே அப்படியே பால் தாக்ரேவை உள்வாங்கியிருந்தார். முகம், பேச்சு தோரணை, கை அசைவுகள் என அனைத்தும் பால் தாக்கரே போலவே இருக்கும். இவர் அரசியலில் அதிரடிக்கு பெயர் போனவர்.

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா

உத்தவ் தாக்கரே, பால் தாக்ரேவின் மகன். இருப்பினும் லேட்டாகத்தான் இவர் அரசியலுக்கு வந்தார். எனவே பால் தாக்கரேவுக்கு பிறகு சிவசேனாவை யார் கைப்பற்றுவது என்பதில் சிக்கல் எழுந்தது. பெரும்பாலானோர் ராஜ் தாக்கரேவுக்கு ஆதரவாக இருந்தாலும், அவர் உத்தவ் தாக்கரேவால் ஓரங்கட்டப்பட்டு, சிவசேனாவை கைப்பற்றினார். இதனையடுத்து ராஜ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா எனும் கட்சியை தொடங்கினார்.

கடந்த 20 ஆண்டுகளாக எதிர் எதிராக இருந்த இவர்கள், தற்போது பொது எதிரியை வீழ்த்த ஒன்றிணைந்துள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+