வீர சாவர்க்கர் குறித்து அவதூறு:ராகுல் காந்திக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க நீதிமன்றத்தில் வாதம்!
மும்பை: இந்துத்துவவாதி வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என புனே சிறப்பு நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுவதால் இந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், அடுத்த முறை விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

புனே நீதிமன்றத்தில் வீர சாவர்க்கர் பேரன் சாத்யகி சாவர்க்கர், ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த அவதூறு வழக்கில், 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் ராகுல் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, வீர சாவர்க்கர் தமது சகாக்களுடன் இணைந்து முஸ்லிம் நபர் ஒருவரை தாக்கியதாக புத்தகத்தில் படித்தேன் என பேசினார் ராகுல் காந்தி. வீர சாவர்க்கர் எந்த ஒரு புத்தகத்திலும் அப்படி எழுதியதே இல்லை. ஆகையால் உண்மைக்கு மாறாக பேசிய ராகுல் காந்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் சாத்யகி சாவர்க்கர்.
புனே நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சாத்யகி சாவர்க்கரின் புகாரில் உண்மை இருக்கிறது என ராகுல் காந்திக்கு எதிராக அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் விசாரணை நடத்த ராகுல் காந்தியை நேற்று ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகவில்லை.
இதனால் வீர சாவர்க்கர் பேரன் சாத்யகி சாவார்க்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ராகுல் காந்தி இந்த வழக்கில் தொடர்ந்து 3 முறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் ராகுல் காந்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது பிடிவாரண்ட் ஆணை பிறப்பிக்க வேண்டும் என வாதிட நீதிமன்றம் பரபரப்பானது.
ஆனால் ராகுல் காந்தியின் வழக்கறிஞர் மிலிந்த் பவார், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் ராகுல் காந்தியால் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என விளக்கம் தந்தார். இந்த விளக்கத்தை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது. அன்றைய தினம் விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் எனவும் புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications