20 ஆண்டு பகை பறந்தது.. ஒன்றான உத்தவ் - ராஜ் தாக்கரே.. பால் தாக்கரே செய்ய முடியாததை செய்த பட்னாவிஸ்
மும்பை: 20 ஆண்டுகளாக பகையாளிகளாக இருந்த சகோதரர்கள் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாகி உள்ளனர். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் அவர்கள் 2 பேரையும் ஒன்றாக்கி உள்ளது. இந்நிலையில் தான் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரேவை ஒன்றாக இணைக்க சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே எவ்வளவோ முயன்றும் கூட முடியாத நிலையில் தற்போதைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்துள்ளார். இது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
மகாராஷ்டிராவில் அண்ணன் - தம்பியாக இருக்கும் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் எதிரெதிர் திசையில் பயணித்தனர். உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) தலைவராக உள்ளார். ராஜ் தாக்கரே மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சியின் தலைவராக உள்ளனர்.

உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் மகன் ஆவார். பால் தாக்கரேவின் தம்பி ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் தான் ராஜ் தாக்கரே. உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே ஆகியோர் பெரியப்பா - சித்தப்பா மகன்கள்.
கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே வெளியேறினார். சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக கட்சியில் இருந்து வெளியேறினார். ராஜ் தாக்கரே - உத்தவ் தாக்கரே ஆகியோரை ஒன்றாக இணைக்க தனது மரணம் வரை பால் தாக்கரே முயன்றார். ஆனால் நடக்கவில்லை. கடந்த 2012ம் ஆண்டில் பால் தாக்கரே காலமானார். அதன்பிறகு உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில்தான் மகாராஷ்டிராவில் மும்மொழி கொள்கையை அம்மாநில அரசு கொண்டு வந்தது. அதில் ஹிந்தியை கட்டாயமாக்கியது. இதற்கு உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மும்மொழி கொள்கையால் மராத்தி மொழிக்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறினர். இதையடுத்து மாநில அரசு பின்வாங்கியது. ஹிந்தி கட்டாயம் என்பதை நிறுத்தி வைத்தது.
இதையடுத்து இன்று வோர்லியில் உள்ள என்எஸ்சிஐ அரங்கில் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. இதில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் ஒன்றாக பங்கேற்றனர். 20 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒன்றாக மேடை ஏறினர். அவாஜ் மராத்தி சா (வாய்ஸ் ஆப் மராத்தி) என்ற பெயரில் அங்கு பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசும்போதும், ‛‛ அரசியல் மற்றும் சண்டையில் எப்போதும் மகாராஷ்டிரா தான் பெரியது. இன்று 20 ஆண்டுகளுக்கு பிறகு உத்தவ் மற்றும் நான் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து வந்துள்ளோம். பாலசாகேப் (பால் தாக்கரே) செய்ய முடியதை தேவேந்திர பட்னாவிஸ் செய்துள்ளார். அவர் செய்த வேலை தான் எங்கள் இருவரையும் ஒன்றாக்கி உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications