மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? பாஜக - காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கும் பார்முலா இதுதான்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியை விட பாஜக கூட்டணி தான் அதிக இடங்களில் வென்றுள்ளது. இதனால் அடுத்த முதல்வர் யார்? முதல்வர் எப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது. மகாராஷ்டிரா சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நவம்பர் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 288 சட்டசபை தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணிக்கு மகாயுதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணிக்கு மகா விகாஸ் அகாடி என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 95 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 52 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மகாராஷ்டிராவை பொறுத்தவரை தனி மெஜாரிட்டிக்கு 145 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக எந்த ஒரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இந்த முறையும் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை.
இதனால் மீண்டும் மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தற்போது வரை முதல்வர் வேட்பாளர் யார்? என்பது அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் முதல்வர் பதவி மீது ஒன்றுக்கு மேற்பட்ட தலைவர்கள் கண் வைத்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணம்.
அதாவது பாஜக கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முதல்வர் பதவி மீது கண்வைத்துள்ளது. அதேபோல் எதிர்க்கட்சிகளை பொறுத்தமட்டில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் முதல்வர் பதவியை பெற ஆர்வமாக உள்ளது.
இந்நிலையில் தான் ரிசல்ட் வெளியாகும் இன்றைய நாளில் முதல்வர் வேட்பாளர் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வென்றால் முதல்வர் வேட்பாளர் எப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர்? என்று அந்தந்த கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், ‛‛பாஜகவினரை பொறுத்தவரை தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க விரும்புகின்றனர். சிவசேனா கட்சியினர் ஏக்நாத் ஷிண்டேவையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அஜித் பவாரையும் முதல்வராக்க கோரிக்கை வைக்கின்றனர். இதனால் முதல்வர் வேட்பாளர் தற்போது வரை தேர்வு செய்யப்படவில்லை. ரிசல்ட் வெளியான பிறகு பாஜக மேலிடம் மற்றும் பிற கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி முதல்வரை தேர்வு செய்வார்கள்’’ என்றார்.
அதேபோல் பாஜக எம்எல்சி பிரவீன் தாரேகர் கூறுகையில், ‛‛பாஜகவில் இருந்து ஒருவர் முதல்வராக வேண்டும் என்றால் அது தேவேந்திர பட்னாவிஸ் தான்’’ என்று கூறினார். அதேபோல் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்சி அமோல் மித்காரி கூறுகையில், ‛‛ரிசல்ட் என்னவாக இருந்தாலும் சரி.. அஜித் பவாரின்தேசிய வாத காங்கிரஸ் தான் கிங் மேக்கராக இருக்கும்’’ என்றார்.
பாஜக கூட்டணியின் நிலைமை இப்படி இருக்க எதிர்க்கட்சி கூட்டணியை எடுத்து கொண்டால் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி மீது கண்வைத்துள்ளார். இதுபற்றி உத்தவ் தாக்கரே சிவசேனாவின் சஞ்சய் ராவத் கூறுகையில், ‛‛தற்போது வரை முதல்வர் பதவி குறித்து எந்த பார்முலாவையும் நாங்கள் வகுக்கவில்லை. தேர்தல் முடிவுக்கு பிறகு தான் கூட்டணி கட்சிகளோடு அமர்ந்து முதல்வர் தேர்வு செய்யப்படுவார்’’ என்றார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், ‛‛மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அங்கடி எனும் காங்கிரஸ் கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும். அதன்பிறகு 3 கட்சிகளும் அமர்ந்து பேசி முதல்வரை தேர்வு செய்வோம்’’ என்றார்.












Click it and Unblock the Notifications