சித்தப்பா சரத் பவாரிடம் கட்சியை பறித்தவர்.. விமான விபத்தில் சிக்கிய அஜித் பவார் யார்? பின்னணி
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று தனி விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் அஜித் பவார் மரணமடைந்தார். இந்நிலையில் தான் அஜித் பவாரின் அரசியல் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். இவர் தேசியவாத கட்சியை சேர்ந்தவர். இவர் மும்பையில் இருந்து இன்று காலையில் பாரமதிக்கு சிறிய ரக தனி விமானத்தில் பயணித்தார். பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
இதில் விமானத்தில் பயணித்த அஜித் பவார், அவரது உதவியாளர்கள், பைலட் என 5 பேர் பலியாகினர்.தற்போது விமான விபத்தில் பலியான அஜித் பவார், மகாராஷ்டிரா மாநிலம் பாரமதியில் கடந்த 1959ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி பிறந்தார். இவருக்கு வயது 65.

இவரது முழுப்பெயர் அஜித் அனந்தராவ் பவார். பிகாம் படிப்பை புனே பல்கலைக்கழகத்தில்படித்திருந்தார். இவரது தந்தை அனந்த் ராவ் பவார். இவர் அஜித் பவாரின் அண்ணன் ஆவார். அஜித் பவாரின் மனைவி பெயர் சுனித்ரா பவார். இவர் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவரின் பெயர் ஜெய், இன்னொருவரின் பெயர் பார்த் பவார்.
அஜித் பவார்கடந்த 1980ம் ஆண்டில் இருந்து தீவிரமாக அரசியலில் இருந்து வந்தவர். தனது சித்தப்பா சரத் பவாருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். இவரது அரசியல் குரு என்றால் சித்தப்பா சரத் பவார் தான். கூட்டணி அரசியல் மற்றும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பெயர் பெற்றவர் அஜித் பவார்.
இவர் மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் தலைவராக இருந்தார். தன்னிடம் அதிகாரம் எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைத்தவர். மேலும் அதிகாரம் இருந்தால் தான் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்ற சிந்தனை கொண்டவர். இந்த எண்ணம் தான் கடந்த 2023ம் ஆண்டில் கூட சரத்பவாரை விட்டு பாஜக கூட்டணிக்கு அவர் செல்ல முக்கிய காரணமாக இருந்தது.
இதனால் அடிக்கடி கூட்டணி மாறும் தன்மை கொண்டவர். சரத் பவார் பேச்சை மீறி பாஜகவுடன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சென்று துணை முதல்வர் பதவியை பெற்றவர். காங்கிரஸ், சிவசேனா, பாஜக என்று அனைத்து கட்சி தலைவர்களுடன் நட்பு பாராட்டும் குணம் கொண்டவர்.
இன்னும் சொல்லப்போனால் மகாராஷ்டிராவில் நீண்டகாலமாக துணை முதல்வராக பணியாற்றியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். வெவ்வேறு அரசுகளில் 6 முறை துணை முதல்வராக பணியாற்றி வந்தார். காங்கிரஸின் பிரித்விராஜ் சவான், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட முதல்வர்களிடம் துணை முதல்வராக செயல்பட்டவர்.
கடந்த 2023ம் மகாராஷ்டிரா முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவின் அரசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார். அந்த சமயத்தில் உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் துணை முதல்வராக சரத் பவார் இருந்தார். ஏக்நாத் ஷிண்டேவால் குழப்பம் ஏற்பட்ட பிறகு உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அப்போது ஏக்நாத் ஷிண்டேவை போல் பாஜக கூட்டணியில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் சேர்ந்தார். சரத் பாவரை விட்டு தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேர்ந்து பாஜக கூட்டணிக்கு ஆதரவு வழங்கினார். பாஜக - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு வழங்கி மீண்டும் துணை முதல்வரானார்.
அதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரினார். இதில் அஜித் பவாருக்கு தான் தேசியவாத காங்கிரஸ் கட்சி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் கூறி கடிகாரம் சின்னத்தை அவரிடம் வழங்கியது. இதையடுத்து அஜித் பவார் தேசியவாத கட்சியின் தலைவராக வலம் வந்தார். மகாராஷ்டிரா சட்டபை தேர்தலில் மீண்டும் பாஜக, ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றது. இதையடுத்து மீண்டும் அஜித் பவார் துணை முதல்வரான நிலையில் இன்று விமான விபத்தில் பலியாகி உள்ளார்.












Click it and Unblock the Notifications