30+ கம்பெனிகள், லட்சம் கோடி வருவாய்! ஆனாலும் பணக்காரர்கள் லிஸ்டில் ரத்தன் டாடா இல்லையே ஏன் தெரியுமா?
மும்பை: ரத்தன் டாடாவின் டாடா குழுமத்தின் வசம் ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அவை இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகின்றன. இவ்வளவு பெரிய பிஸ்னஸ் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்த போதிலும் டாடா உலக பணக்காரர்கள் லிஸ்டில் எப்போதும் வந்ததே இல்லை.. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தவர் ரத்தன் டாடா.. டாடா குழுமத்தைச் சர்வதேச அளவில் எடுத்துச் சென்றதில் இவரது பங்கு முக்கியமானது.

பல லட்சம் கோடி வருவாய்: இப்போது டாடா குழுமம் உலகெங்கும் 100+ நாடுகளில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் கோடி வருமானத்தை ஈட்டி வருகிறது. இத்தனை நாடுகளில் இப்படி ஏகப்பட்ட நிறுவனங்களை நடத்தி வந்தாலும் ரத்தன் டாடா அல்லது டாடா நிறுவனத்தில் உள்ள வேறு யாருடைய பெயரும் உலக பணக்காரர்கள் லிஸ்டில் வராது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
டாடா குழுமத்தின் சொத்து மதிப்பில் பல லட்சம் கோடியாக இருந்தாலும் ரத்தன் டாடாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு என்பது வெறும் ரூ. 3,800 கோடி மட்டுமே. அவர் கடந்த 2022இல் வெளியான ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் பணக்கார பட்டியலில் கூட 421ஆவது இடத்தை தான் பிடித்து இருந்தார். அதற்கு முன்பு ரத்தன் டாட 2021ல் 3,500 கோடியுடன் 433வது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்: சமூக சேவை செய்வதில் டாடா குழுமத்திற்கே அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இருக்கிறது. இதன் காரணமாகவே அவர்கள் உலக பணக்காரர்கள் லிஸ்டிலும் இருப்பதில்லை. சமூக சேவை என்றால் ஏதோ சில கோடிகளை மட்டும் ஒதுக்குவதில்லை.. டாடா குழுமம் சம்பாதிக்கும் லாபத்தில் பெரும் தொகை சமூக சேவைக்கே ஒதுக்கப்படுகிறது.
மேலும், மற்ற தொழிலதிபர்களின் மொத்த சொத்தும் குறிப்பிட்ட நபர் அல்லது குறிப்பிட்ட குடும்பத்தினர் பெயரில் தான் இருக்கும். இதனால் லாபமும் அவர்களுக்கே செல்லும் ஆனால், டாடாவை பொறுத்தவரை அவர்கள் சம்பாதிக்கும் லாபத்தில் பெருந்தொகை சமூக சேவைகளுக்கே செல்லும். டாடா குழுமத்தை முதலில் நிறுவிய ரத்தன் டாடாவின் தாத்தா ஜாம்செட்ஜி டாடா தொடக்கத்திலேயே இந்த முடிவைத் தெளிவாக எடுத்துவிட்டார்.
இதுதான் காரணம்: அதாவது டாடா குழுமத்தில் பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில், அவற்றில் பெரும்பங்கை டாடா சன்ஸ் என்ற தாய் நிறுவனமே வைத்து இருக்கிறது. அதாவது டாடா நிறுவனங்களின் லாபத்தில் சுமார் 66 சதவீதம் இந்த டாடா சன்ஸ் நிறுவனத்திற்கே செல்லும். இந்த டாடா சன்ஸ் குழுமம் தனக்கு வரும் லாபத்தில் பெரும்பகுதியை டாடா அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்குவதையே வழக்கமாக வைத்துள்ளது. டாடா குடும்பத்தினர் யாருக்கும் தங்கள் சொந்த நிறுவனத்திலேயே அதிக பங்குகளை வைத்திருக்கவில்லை.
டாடா அறக்கட்டளைகள் மூலம் நாட்டின் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டாடா சார்பில் கல்லூரி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் இருக்கிறது. அவை எல்லாம் டாடா சன்ஸ் நன்கொடையில் இந்த அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
டாடா: அதாவது மற்ற குழுமங்களில் குறிப்பிட்ட நபருக்கே லாபத்தின் பெரும்பகுதி செல்லும். இதனால் அவர்கள் உலக பணக்காரர்கள் அல்லது இந்தியப் பணக்காரர்கள் லிஸ்டில் இடம் பெறுகிறார்கள். ஆனால், டாடா குழுமத்தில் அப்படி இல்லை. எல்லாமே அறக்கட்டளைக்கே செல்கிறது. இதன் காரணமாகவே ரத்தன் டாடா உள்ளிட்ட எவரும் உலக பணக்காரர்கள் லிஸ்டில் வருவதில்லை.












Click it and Unblock the Notifications