'எக்ஸ்' உடன் மீண்டும் மலர்ந்த காதல்.. காதலனின் மனைவியை தீர்த்துக்கட்டிய "டீச்சர்".. திக்திக் மும்பை
மும்பை: தனது முன்னாள் காதலனின் மனைவியை கூலிப்படை ஏவி தீர்த்துக்கட்டிய ஆசிரியை ஒருவரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்படும் வன்முறைகளும், அசம்பாவிதங்களும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. அனைவரின் கையிலும் ஸ்மார்ட்ஃபோன் புழங்குவதும், சமூக வலைதளங்களின் தாக்கமும் இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கு மூலக் காரணமாக இருக்கின்றன.
கணவன், மனைவி இடையே சிறு மனஸ்தாபம் ஏற்பட்டாலும், அதை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என நினைக்காமல், உடனே வேறு துணை தேடும் போக்கு இன்றைய இளம் தலைமுறையினர் இடையே அதிகரித்து வருகிறது. ஒருவேளை, அப்படி தான் விரும்பிய நபரை அடைவதற்கு யார் தடையாக இருந்தாலும், அவர்கள் தயவுதாட்சண்யம் இன்றி கொலை செய்யும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன. கணவன், மனைவி, குழந்தைகள் என எந்த உறவும் இதற்கு விதிவிலக்கு இல்லை எனக் கூறும் அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது.
தற்போது அப்படியொரு மோசமான சம்பவம்தான் மும்பையில் அரங்கேறி இருக்கிறது. அதுகுறித்த விவரங்கள் வருமாறு:

மகிழ்ச்சியாக சென்ற வாழ்க்கை..
மும்பை பன்வெல் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா ராவத் (30). டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், மும்பையைச் சேர்ந்த தேவர்து சிங் (33) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தேவர்து சிங் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இவர்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர்.

ஃபேஸ்புக்கில் வந்த வினை..
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தேவர்து சிங்கின் ஃபேஸ்புக்கில் 'ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்' (friend request) வந்துள்ளது. அதை பார்த்த போது, அது அவரது முன்னாள் கல்லூரி காதலி நிகிதா (32) என்பது தெரியவந்தது. இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து, பின்னர் பெற்றோர் சம்மதிக்காததால் பிரிந்தவர்கள் ஆவர். பழைய நினைவுகள் அலைபாய, தேவர்து சிங்கும் ஆர்வமாக அவரது ரெக்வஸ்டை ஏற்க, விதி தன் வேலையை காட்ட ஆரம்பித்தது.

மீண்டும் மலர்ந்த காதல்
நிகிதாவுக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் சூழலில், இருவரும் தங்கள் பழைய காதல் வாழ்க்கை குறித்து பேசி வந்துள்ளனர். முதலில் சாதாரணமாக ஆரம்பித்த அவர்கள் பேச்சில், நாட்கள் செல்ல செல்ல காதல் ரசம் கொட்ட தொடங்கியது. ஒருகட்டத்தில் அவர்களுக்குள் மீண்டும் காதல் மலர்ந்தது. தினமும் மணிக்கணக்கில் ஃபோனிலும், நேரில் சந்தித்தும் இருவரும் பொழுதை கழித்து வந்தனர். மீண்டும் சேர்ந்து வாழ்வது குறித்தும் அவர்கள் பேசி வந்துள்ளனர்.

மனைவிக்கு தெரிந்ததால் தகராறு
இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு கணவர் தேவர்து சிங்கின் செல்போனை எதேச்சையாக அவரது மனைவி பிரியங்கா ராவத் எடுத்து பார்த்துள்ளார். அப்போது தான், கணவருக்கும், அவரது முன்னாள் காதலி நிகிதாவுக்கும் இடையேயான கள்ளக்காதல் பிரியங்காவுக்கு தெரியவந்தது. இதையடுத்து, கணவரிடம் இதுகுறித்து கேட்டு சண்டை போட்டுள்ளார் பிரியங்கா. அதுமட்டுமல்லாமல், நேராக நிகிதா ஆசிரியையாக பணிபுரியும் பள்ளிக்கே சென்று அவரிடம் பிரியங்கா தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக, சில நாட்களாக தேவர்து சிங் - நிகிதா இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது.

கூலிப்படை ஏவி கொலை
ஆனால், தனது முன்னாள் காதலனை மறக்க முடியாத நிகிதா, தங்கள் கள்ளக்காதலுக்கு இருக்கும் தேவர்து சிங்கின் மனைவி பிரியங்காவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். இந்த திட்டத்துக்கு தேவர்து சிங்கும் சம்மதித்தார். இதற்காக அவர்கள் 3 லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படையை அமர்த்தினர். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி பன்வெல் ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டுக்குச் சென்ற பிரியங்காவை கூலிப்படையினர் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், தேவர்து சிங்கும், நிகிதாவும் இணைந்துதான் இந்தக் கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications