ஒரே தவறு.. 2700 கோடி காலி.. அனில் அம்பானி வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் பரபரப்பு தகவல்கள்
மும்பை: யெஸ் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த ராணா கபூர் பொறுப்பில் இருந்தபோது 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் நிதி நிறுவனத்தில் ரூ.5 ஆயிரத்து 10 கோடி முதலீடு செய்துள்ளார். அப்படி செய்யப்பட்ட முதலீடு காரணமாக யெஸ் வங்கிக்கு ரூ.2 ஆயிரத்து 700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. ராணா கபூர் ஒரு தலைபட்சமாக இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் என்றால் அது முகேஷ் அம்பானி தான். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, தொட்ட இடமெல்லாம் பொன்னாகியது. தொழிற்சாலைகள் உள்பட பாரம்பரியமான அதன் தொழில்கள் தவிர, ஜியோ குழுமம், எண்ணெய் கிணறுகள், சில்லறை வணிகம், பெட்ரோல் பங்க், ஊடகம் என எல்லாவற்றிலும் முகேஷ் அம்பானியின் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் அவரது தம்பியான அனில் அம்பானி பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதுடன், பணமோசடி புகார்களிலும் சிக்கி உள்ளார். அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்துள்ளதாக சி.பி.ஐ. 2 வழக்குகளை பதிவு செய்திருக்கிறது.

இதில் ரூ.2 ஆயிரத்து 796 கோடி முறைகேடு வழக்கில் தொழில் அதிபர் அனில் அம்பானி, யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூர், அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 13 பேர் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ. சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இதில் கடன் மற்றும் முதலீடு தொடர்பாக குற்றவியல் சதி, மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டிருந்தது.
அனில் அம்பானியின் நிறுவனத்தில் முதலீடு செய்த காரணத்தால் யெஸ் வங்கி சந்தித்த இழப்பு தொடர்பாக சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு விவரங்களை பார்ப்போம். "யெஸ் வங்கியின் தலைமை நிர்வாக இயக்குநராக ராணா கபூர் முன்பு பொறுப்பில் இருந்தார். அவர் அப்படி யெஸ் வங்கியின் இயக்குநராக இருந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் நிதி நிறுவனத்தில் ரூ.5 ஆயிரத்து 10 கோடி முதலீடு செய்திருக்கிறார்.
அதாவது அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.2 ஆயிரத்து 965 கோடியும், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.2 ஆயிரத்து 45 கோடியும் என மொத்தம் 5 ஆயிரத்து 10 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.. ஆனால் 2019-ம் ஆண்டுக்குள் இதில் 3 ஆயிரத்து 337 கோடி செயல்படாத முதலீடாக மாறி இருக்கிறது. அதாவது திரும்ப கிடைக்காத முதலீடாக மாறி உள்ளது.
இந்த முதலீட்டுக்கு எதிரான பத்திரங்களில் இருந்து வங்கியால் முழுமையாக பணத்தை திரும்ப பெறமுடியவில்லை. இதனால் யெஸ் வங்கிக்கு ரூ.2 ஆயிரத்து 796 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ராணா கபூர், அவரது மனைவி பிந்து கபூர் மற்றும் மகள்கள் ராதா மற்றும் ரோகினி கபூர் ஆகியோருடன் அதானி குழுமம் மேற்கொண்ட குற்றவியல் சதித்திட்டத்தின் காரணமாக இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது யெஸ் வங்கிக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை முழுமையாக அறிந்திருந்தும் ராணா கபூர் ஒருதலைப்பட்சமாக இந்த முடிவை எடுத்திருக்கிறார்" இவ்வாறு சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications