கோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா? 13 பலி பின்னணியில் பகீர்.. 2 பேர் கைது
Recommended Video
மைசூர்: கர்நாடக மாநிலத்தில் விஷம் கலந்த கோவில் பிரசாதம் சாப்பிட்டு 12 பேர் பலியான சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம்-கர்நாடக மாநில எல்லைப்புற கர்நாடக மாவட்டம் சாம்ராஜ்நகர். இங்கு கொள்ளேகால் தாலுகாவில் உள்ள சுளவாடி என்ற கிராமத்திலுள்ள மாரம்மா என்ற அம்மன் கோயிலில் கோபுரம் கட்ட ஊர்கமிட்டி முடிவு செய்தது.
இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதையொட்டி பூஜைகள் முடிவடைந்ததும், பக்தர்களுக்கு தக்காளி சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் திரளாக இதில் பங்கேற்று பிரசாதம் வாங்கி சாப்பிட்டனர்.
ஆனால், பிரசாதம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கொள்ளேகால், மைசூர் நகரங்களிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக சிலர் மைசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை நிலவரப்படி 12 பேர் பலியாகியுள்ளனர். பிரசாதத்தில் யாரோ திட்டமிட்டு விஷத்தை கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், உணவு மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வயல்களுக்கு தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்து, பிரசாதத்தில் கலக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 80 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் 12 பேர் நிலைமை மோசமாக உள்ளது. சிகிச்சை பெறுவோரை கர்நாடக முதல்வர் குமாரசாமி, அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கர்நாடக அரசால், தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் இரு கோஷ்டிகள் நடுவே மோதல் இருந்து வந்துள்ளது. எனவே அதில் ஒரு கோஷ்டி, கோவில் சாப்பாட்டில் விஷத்தை கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர்.