வெடித்தது காவிரி பிரச்சினை.. கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்.. சாலை மறியல்
மைசூர்: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக விவசாயிகள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மைசூர் அருகே உள்ள டி. நரசாபுரா பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு, சாலை மறியல் போராட்டத்தில் இன்று மதியம் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாய சங்கத்தின் தலைவர் குருபூரு சாந்தகுமார் பேசுகையில், "கபினி அணை கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. தமிழகம் அல்லது வேறு மாநிலம் இதற்கு பணம் தரவில்லை. 10 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டுள்ள நிலையில், 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுகிறார்கள். நாம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடவா இங்கே அணைகட்டி வைத்துள்ளோம்.
கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பதில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இருக்கின்றனவே தவிர விவசாயிகள் பிரச்சினை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. எனவே நாமே நமக்காக போராட வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். சாலை மறியலால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.