கர்நாடகா: கேஆர்எஸ் அணையில் 'மது விருந்து'டன் தசரா - சிக்கிய 64 பேரில் தமிழக விஐபி வாரிசுகளா?
மைசூர்: கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணை (கேஆர்எஸ்) நீர்ப் பகுதியில் சாமியானா பந்தம் அமைத்து மது விருந்துடன் தசரா கொண்டாடிய 8 இளம் பெண்கள் உட்பட 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேஆர்எஸ் அணையில் சிக்கிய 64 பேரில் சிலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்கின்றன கர்நாடகா போலீஸ் வட்டாரங்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் மகன்கள் இந்த விருந்தில் பங்கேற்று சிக்கி இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகப் புகழ் பெற்ற கர்நாடகாவின் தசரா திருவிழா மைசூரில் அக்டோபர் 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. மைசூர் தசரா திருவிழாவை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இந்த தசரா கொண்டாட்டத்தை முன்னிட்டு கிருஷ்ணராஜ சாகர் அணை (கேஆர்எஸ் அணை) பகுதியில் சாமியானா பந்தல் அமைத்து இரவு ரேவ் பார்ட்டி நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீசார் சென்ற போது ஆண்களும் இளம் பெண்களும் மதுபோதையில் மிதந்தபடி இருந்துள்ளனர். அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது உச்சகட்ட போதையில் இருந்த சிலர், போலீசாரை தாக்கி இருக்கின்றனர்.
இதனையடுத்து மது விருந்தில் கலந்து கொண்ட 64 பேரையும் கொத்தாக தூக்கியது போலீஸ். இவர்களில் 8 பேர் இளம் பெண்கள். அங்கிருந்த சிகரெட் பாக்கெட்டுகள், மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு சிலர் போதைப் பொருட்களை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த பார்ட்டியில் பங்கேற்ற இஸ்ரேல் பாப் பாடகர் மற்றும் அவரது குழுவினரும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடி இருக்கின்றனர். அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே கேஆர்எஸ் அணை பகுதியில் பிடிபட்ட 64 பேரில் சிலர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் வாரிசுகளாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இவர்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகக் கூடும் என்பதும் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications