நித்யானந்தாவுடன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தொடர்பு.. கைலாசாவில் ஹாசன் எம்பி தஞ்சம்? காங்கிரஸ் பகீர்
மைசூர்: பாலியல் புகாரில் நாட்டை விட்டே தப்பி சென்று தற்போது நித்யானந்தா வசித்துக் கொண்டிருக்கும் கைலாசாவுக்கு செல்ல பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்து வருவதாக குடகு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமணா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் ஹாசன் தொகுதியில் ஜேடிஎஸ் கட்சியின் எம்பியாக உள்ளவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவரது தந்தை ரேவண்ணா. கர்நாடகா லோக்சபா தேர்தலையொட்டி ஜேடிஎஸ்ஸும் பாஜகவும் இணைந்து கூட்டணி அமைத்தது.

பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் வாட்ஸ் ஆப்களில் பரவியது. ரேவண்ணாவிடம் உதவி கேட்டு வரும் பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக எடுத்து அதை பென் டிரைவில் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த வீடியோதான் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரஜ்வலோ, அவை எல்லாம் மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் என மறுப்பு தெரிவிக்கிறார். இந்த வீடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடியோ வெளியான நிலையில் பிரஜ்வல் ஜேடிஎஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்கு பதிவின் போதே பிரஜ்வல் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. பென் டிரைவ் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. பிரஜ்வலுக்கு எதிராக சாட்சி கூறுவதை தடுக்க பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக அவருடைய தந்தை ரேவண்ணா கைதாகி சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் வெளிநாட்டில் உள்ள பிரஜ்வல்லை இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வு குழு) முயற்சித்து வருகிறது. இந்த நிலையில்தான் பிரஜ்வல்லுக்கு பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தாவுடன் தொடர்பு இருப்பதாக மைசூர் குடகு லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் லட்சுணமா அதிர்ச்சியான தகவலை அளித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம், ராம்நகர் பிடதியில் ஆசிரமத்தை வைத்து நடத்தி வந்தநர் நித்யானந்தா. இவர் பல பெண்களை பலாத்காரம் செய்ததாக புகார்கள் எழுந்தன. அந்த வழக்கு இன்னும் ராம்நகர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விசாரணைக்கு ஆஜராகாத நித்யானந்தா, எங்கோ தப்பி சென்றுவிட்டார்.
அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருகிறார் என்கிறார்கள். அதற்கான கரன்சி, பாஸ்போர்ட், கொடி, நாணயம் உள்ளிட்டவைகளை கூட நித்யானந்தா உருவாக்கினார். அவர் அங்கு தனது சீடர்களுடன் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் அவ்வப்போது தன்னை பற்றி சமூகவலைதளங்களில் தகவல்களை நித்யானந்தா வெளியிட்டு வருகிறார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. இந்த நிலையில் வெளிநாட்டுக்கு சென்றுள்ள பிரஜ்வல், நித்யானந்தாவுடன் கைலாசாவில் இருப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வெளிநாட்டில உள்ள நித்யானந்தாவுடன் பிரஜ்வல் தொடர்பில் இருக்கிறார். அவர் வசிக்கும் நாட்டுக்கு பிரஜ்வல் செல்ல வாய்ப்புள்ளது. இதற்காக அவர் தயாராகிறார். வெளிநாட்டிலிருந்து பெங்களூருக்கு வர விமான டிக்கெட்டை பிரஜ்வல் வாங்கியதாக கூறுகிறார்கள். ஆனால் அவர் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications