நாகைக்கு அடுத்தடுத்து அடி.. புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் விபத்தில் சிக்கி பலி
சாலை விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.
நாகை: நாகை மக்களுக்கு அடி மேல் அடி விழுந்து வருகிறது. இன்று காலை சாலை விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தார்கள். புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்கள் இந்த பெண்கள் நால்வரும் என்பது பரிதாபத்துக்குரிய செய்தி!!
கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மிக முக்கியமானது நாகை. வீடு வாசல், நிலபுலன்களை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயல் வந்துபோய் ஒரு வாரம் ஆகியும் அவர்களால் பழைய நிலைமைக்கு திரும்ப முடியவில்லை.அப்படித்தான் நாகையில் நீர்நிலை முகாமில் சிலர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நீர்நிலை முகாம்
இந்நிலையில் இன்று காலை நீர்நிலை முகாமில் இருந்து தங்கள் பகுதிக்கு செல்லலாம் என்று நினைத்து 4 பெண்கள் சாலையை கடக்க முயன்றனர்.
4 பெண்கள் பலி
அப்போது அந்த வழியாக படுவேகத்தில் வந்த மினி வேன் ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. 4 பெண்களுமே உடல்நசுங்கி அங்கேயே உயிரிழந்தார்கள். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர்கள் அமுதா, சுமதி, சரோஜா, ராஜேஸ்வரி ஆகியோர் என தெரியவந்தது.
தீவிர சிகிச்சை
இதில் டிரைவர் மணிகண்டன் பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலைமை பரிதாபமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து சோகம்
ஏற்கனவே புயலால் எல்லாத்தையும் இழந்து தவித்து வந்த நிலையில், பெண்கள் இப்படி உயிரிழந்தது அவர்களின் குடும்பத்தினரிடையே மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சாலை விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.