அதிதீவிர "மாண்டஸ்" புயலுக்கு மிக அருகில்.. நடுவானில் பறந்த விமானம்! நாகப்பட்டினம் அருகே நடந்தது என்ன
நாகப்பட்டினம்: அதிதீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்தான் புயலுக்கு அருகே விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது.
அதிதீவிர மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்க உள்ளது. இந்த அதிதீவிர மாண்டஸ் புயல் இன்று 3 மணி நேரத்தில் சாதாரண புயலாக வலிமை இழக்கும்.
புயல் வலிமை இழந்த பின் அது கரையை கடக்கும். சென்னை மாமல்லபுரம் - மரக்காணம் இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னை கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் தற்போது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
நேரம் செல்ல செல்ல புயல் இன்னும் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது 85 கி.மீ. வேகத்தில் மிக பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கனமழையால் நிரம்பும் ஏரிகள்..செம்பரம்பாக்கம், புழல்,பூண்டி ஏரிகளில் இருந்து இன்று உபரி நீர் திறப்பு
புயல் எங்கே இருக்கிறது
மாண்டஸ் தமிழ்நாட்டை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் உள்ளது. இன்று இரவு சென்னைக்கு அருகே கடல் பகுதியை இந்த புயல் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்காலுக்கு தென்கிழக்கில் 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் உள்ளது. அதேபோல் நாகப்பட்டினம் அருகில் இருப்பதாலும் புயல் காரணமாக காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.
புயல்
இந்த புயல் இன்று காலை நாகப்பட்டினம் அருகே 300 கிமீ தொலைவில் இருந்தது. இதனால் நாகப்பட்டினம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. நாகப்பட்டினத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டது. புயல் நாகப்பட்டினம் கடலோர பகுதிகள் வழியாகவே மரக்காணம் நோக்கி வரப்போகிறது. இதனால் நாகப்பட்டினத்தில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. அங்கு மிக பலத்த காற்றும் வீசிக்கொண்டு இருக்கிறது. டெல்டா மாவட்டங்களிலும் இதனால் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமானம்
இந்த நிலையில்தான் நாகப்பட்டினம் அருகே ஏறக்குறைய 300 கிலோ மீட்டர் தொலைவில் புயல் இருக்கும் போது, புயலுக்கு மேலே விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது. புயலின் கண்ணுக்கு அருகே இந்த விமானம் பறந்து சென்றுள்ளது. இது டெல்லியில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் இலங்கையை சேர்ந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகும். ஏர்பஸ் விமானமான இது புயலுக்கு மேலே 38000 அடி உயரத்தில் பறந்து உள்ளது. புயலுக்கு மேலே 38000 அடி உயரத்தில் பறந்ததால் இது புயலால் பாதிக்கப்படவில்லை. ஆனால் விமானத்தில் இருந்தவர்கள் புயல் எப்படி இருக்கிறது என்று பார்க்க முடியும்.
மழை
இந்த புயல் காரணமாக இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் மிகவும் பலத்த மழை பெய்யலாம் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரியில் இன்று பலத்த மழை கொட்டி தீர்க்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.