தஞ்சையை அடுத்து நாகை.. மீண்டும் ஒரு தேர் விபத்து..! சக்கரத்தில் சிக்கி அலறி துடித்த தொழிலாளி பலி..!
நாகப்பட்டினம் : நாகை அருகே உத்திராபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் தேரில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் உள்ள களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன்படி 94ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது.

தஞ்சை தேர் விபத்து
தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது. இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

11 பேர் பலி
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இதேபோல் ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

மீண்டும் சம்பவம்
இந்த திருவிழாவின் போது தேரின் சக்கரம் ஏறியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். தேருக்கு முட்டுக்கட்டை போட்டபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.உத்திரபதீஸ்வரர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். விழாவில் நான்குரத வீதிகளில் தேர் செல்லும்போது அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டபடியே இழுத்து செல்லப்பட்டு உள்ளது.

சக்கரம் ஏறியது
இந்த நிலையில், தேர் புறப்பட்டு இரண்டு மணிநேரத்திற்கு பின்பு முட்டுக்கட்டை போட்டபோது, தீபராஜன் என்ற இளைஞர் மீது தேரின் சக்கரம் ஏறியது. இந்த சம்பவத்தில் காயமடைந்த தொழிலாளியான தீபராஜன் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications