அடுத்த புயலா? மீன்வளத்துறையின் “வார்னிங்” - “பேக்” அடித்த நாகை மீனவர்கள் - சூறாவளி காற்று வீசுமாம்
நாகப்பட்டினம்: வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகம் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், தமிழ்நாடு மீன்வளத்துறையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்தது. இதனால் நாகை மீனவர்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரை திரும்பி உள்ளனர்.
இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டிசம்பர் 22 ஆம் தேதி வரை கடலில் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.
மணிக்கு 35 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் எனவும், தொடர் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் கடல் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீன்வளத்துறை
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், தடையை மீறி மீன் பிடிக்க செல்பவர்கள் மீது தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நாகை மீனவர்கள்
இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர், பட்டினச்சேரி, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், செருதூர், காமேஸ்வரம், ஆற்காட்டு துறை புஷ்பவனம், கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

மீனவர்கள் கவலை
கனமழை, காற்றில் படகுகள், வலைகள் சேதமடையாமல் இருக்க அவற்றை பத்திரமாக பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மாண்டஸ் புயல் காரணமாக ஒரு வாரத்திற்கு மேலாக மீன்பிடி தொழில் முடங்கியதால் வேதனையில் இருந்த மீனவர்கள், தற்பொழுது மீண்டும் வெளியாகி உள்ள எச்சரிக்கை கவலை அடைந்துள்ளனர்.

வானிலை மையம் தகவல்
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக 24 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சூறாவளி வீசும்
மீனவர்களுக்காக வானிலை ஆய்வு மையம் விடுத்து இருக்கும் எச்சரிக்கையை பொறுத்தவரை இன்று தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அடுத்த 2 நாட்கள்
நாளை மற்றும் நாளை மறுநாள் குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கடலுக்கு செல்ல வேண்டாம்
23 ஆம் தேதி மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications