வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே மோதல்.. அம்பேத்கர் சிலை உடைப்பு.. பெரும் கலவரம்.. பரபரப்பு!
வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதராண்யம்: வேதராண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
வேதாரண்யத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. வேதாரண்யத்தில் ஜீப்பில் வந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது தவறுதலாக மோதியுள்ளார்.
இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட வாய் தகராறு பின் ஜாதி கலவரமாக உருவெடுத்துள்ளது. இந்த மோதல் காரணமாக இரண்டு தரப்பினரிடையே பெரிய அளவில் சண்டை நடந்துள்ளது.

சாலையில் இறங்கி சண்டை
இரண்டு தரப்பினரும் மாறி மாறி சாலையில் இறங்கி சண்டை போட்டு இருக்கிறார்கள். அந்த இடத்திற்கு சண்டையை தடுக்க போலீசும் சரியான நேரத்தில் வரவில்லை. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரண்டு பிரிவினரும் மாறி மாறி பொது சொத்துக்களை சேதப்படுத்தி சண்டை போட்டு உள்ளனர்.

என்ன தாக்குதல்
இருதரப்பு மோதலில் காவல் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு தரப்பை சேர்ந்த பத்துக்கும் அதிகமான நபர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து அங்கு இருக்கும் பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். காவலர்களையும் தலையில் கல்லை வீசி தாக்கி உள்ளார்.

சிலை உடைப்பு
இந்த சண்டை முற்றவே சாலையில் சென்று கொண்டிருந்தவரின் காரை வழிமறித்து தீவைத்து ஒரு பிரிவினர் எரித்தனர். அதேபோல் இன்னொரு பிரிவினர் அந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை உடைத்தனர். அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த சிலை உடைப்பிற்கு எதிராக மக்கள் அங்கு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போலீஸ் குவிப்பு
இரு பிரிவினர் இடையே மோதலை தொடர்ந்து தற்போது அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு மேலும் பிரச்சனை பெரிதாகாமல் இருக்க அதிக எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அந்த பகுதிக்கு அதிவிரைவு படை தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications