போச்சே! பாஜகவினர் வெடித்த பட்டாசுகளால் கொழுந்து விட்டு எரிந்த குடிசைகள்.. நாகையில் ‘ஷாக்’ சம்பவம்!
நாகை: நாகையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவினர் வைத்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி குடிசை வீடுகள் பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நாகை தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று நாகப்பட்டினம் - நாகூர் பிரதான சாலையில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று வாக்கு சேகரித்தார்.

அந்த வகையில் காடம்பாடி பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசுகள் வெடித்து வேட்பாளரை வரவேற்ற போது, வெடித்துச் சிதறிய பட்டாசுகள், சாலையோரம் இருந்த குடிசை வீட்டின் கூரையின் மேல் விழுந்தது.
பக்கிரிசாமி என்பவரின் குடிசை வீட்டில் மளமளவென தீ பரவி வீட்டின் கூரை முழுவதும் எரிந்தது. மேலும் அருகில் உள்ள சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் கூரையின் மீதும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, தாங்கள் வெடி வைத்ததால் தீ பற்றியதை கண்டும் காணாமல் பாஜகவினர் அங்கிருந்து நழுவிச் சென்றதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் எரிந்த வீடுகளை பார்வையிட வந்த நிலையில், அவரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இழப்பீடு வழங்க வேண்டும், இழப்பீடு வழங்குவதாக என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால்தான் இங்கிருந்து செல்ல முடியும் என முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications