30 கிலோ எடை.. நாகையில் கரை ஒதுங்கிய சீன சிலிண்டர்! மிரண்ட மீனவர்கள்! உளவு புகாரால் பரபர விசாரணை
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் வெள்ளை நிறத்தில் மூன்றரை அடி உயரத்தில் கேஸ் நிரப்பப்பட்டு 30 கிலோ எடையில் சீனாவின் சிலிண்டர் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் வான்பரப்பில் பலூன் பறக்கவிட்டு சீனா உளவு பார்ப்பதாக கூறி அந்த பலூனை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில் இந்த கேஸ் சிலிண்டர் தமிழ்நாட்டில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்கக்கடல் உள்ளது. இங்குள்ள நம்பியார் நகர் மீனவ கிராமமாகும். இங்கிருந்து தினமும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று காலையில் சில மீனவர்கள் கடற்கரை பகுதியில் நடந்து சென்றனர்.
அப்போது கடற்கரையில் வெள்ளை நிறத்தில் மர்மபொருள் ஒன்று கரை ஒதுங்கி இருந்தது. இதை பார்த்த மீனவர்கள் மிரண்டு போயினர். அதாவது அந்த மர்மபொருள் உருளை வடிவில் சிலிண்டர் போன்று இருந்தது தான் மீனவர்கள் பயந்ததற்கான காரணமாகும்.

சீன எழுத்துக்கள்
இதையடுத்து மீனவர்கள் அந்த சிலிண்டர் அருகே சென்று பார்த்தனர். அப்போது வெள்ளை நிற உருளையில் சிவப்பு வண்ணத்தில் சீன எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த மீனவர்கள் உடனடியாக சிலிண்டரை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக கடலோர காவல் படை போலீசார், க்யூ பிரிவு போலீசார், சுங்கத்துறையினர் சென்று சிலிண்டரை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

போலீஸ் தீவிர விசாரணை
அப்போது மூன்றடி உயரம் கொண்ட அந்த கேஸ் சிலிண்டரில் 30 கிலோ எடையுடன் இருந்தது தெரியவந்தது. மேலும் அதில் காஸ் இருப்பதும் தெரியவந்தது. இருப்பினும் அந்த சிலிண்டர் எப்படி கரை ஒதுங்கியது? என்பது பற்றிய விபரம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் அண்டை நாடான இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கையில் இருந்து சீனா இந்தியாவை உளவு பார்க்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் இந்த சிலிண்டர் எப்படி கரை ஒதுங்கியது? ஏதேனும் கப்பலில் இருந்து இந்த சிலிண்டர் கடலில் விழுந்ததா? இல்லாவிட்டால் யாரேனும் கடலில் வீசினார்களா? என்பது பற்றி விசாரணை துவங்கப்பட்டு வருகிறது.

உளவு புகாருக்கு நடுவே விசாரணை
சமீபத்தில் அமெரிக்கா வான்பரப்பில் சீனா பலூன் மூலம் உளவு பார்த்ததாக கூறப்படும் விவகாரத்தில் அமெரிக்க வெளியுறது்துறை துணை செயலாளர் வெண்டி ஷர்மன் சமீபத்தில் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதாவது சீனா தனது எதிரி நாடுகளை உளவு பார்க்க முயற்சித்து வருகிறது. இந்த பட்டியலில் ஜப்பான், இந்தியாவும் உள்ளன என தெரிவித்தார். இந்நிலையில் தான் தமிழ்நாட்டின் நாகை மாவட்ட மீனவ கிராமத்தில் சீன எழுத்துக்களுடன் கேஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, விசாரணையும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை உளவு பார்த்த சீனா
முன்னதாக அமெரிக்காவை, சீனா உளவு பார்த்து வருவதாகவும், இதற்கான அமெரிக்கா வான்பரப்பில் சீனா பலூன்களை பறக்கவிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அமெரிக்க வான் எல்லையில் பறந்த சீனாவின் பலூனை சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க ராணுவம் போர் விமானத்தை கொண்டு சுட்டு வீழ்த்தியது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமெரிக்காவும் உளவு பார்க்க சீனா வான்பரப்பில் பலூன்களை பறக்கவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது இருநாடுகள் இடையேயும் மோதல் போக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications