மீன்வள பல்கலை., பட்டமளிப்பு விழா..ஆப்செண்ட் ஆன அமைச்சர்! வேளாங்கண்ணி சர்ச்சுக்கு போன ஆளுநர் ரவி!
நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் இன்று தமிழக ஆளுநரும், பல்கலை வேந்தருமான ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரான அமைச்சர் அனுராதா கிருஷ்ணன் புறக்கணித்தார். முன்னதாக தமிழக மக்கள் நலனுக்காக வேளாங்கண்ணி ஆலயத்தில் ஆளுநர் பிரார்த்தனை மேற்கொண்டார் என ராஜ்பவன் கூறியுள்ளது.
தமிழ்நாடு அரசு மீன் வளத்துறையின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மின் வளப் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும் மீன்வளப் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அதே நேரத்தில் பட்டமளிப்பு விழாவினை தமிழ்நாடு அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்காததால், அவர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நாகை மாவட்ட ஆட்சியரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. பல்கலைகழகத்தின் பட்ட பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் ஆட்சியரின் பெயர் இல்லை என கூறப்படுகிறது. மேலும் நேற்று வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நினைவுத் தூணில் ஆளுநர் ரவி அஞ்சலி செலுத்தினார். அந்த நிகழ்ச்சியிலும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இடையே பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக மும்பை மத்திய மீன்வளக் கல்வி நிறுவனத்தின் இயக்குனரான ரவிசங்கர் கலந்து கொண்டார். தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் ஆளுநர் வழங்கினார். ஏற்கனவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களை ஆளுநர் தற்போது வரை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால் பல சிக்கல்கள் எழுந்திருக்கிறது.
மேலும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பேசும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம், பாரதம், இந்து மதம் குறித்து பேசி வருகிறார். இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து ஆளுநரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவரை திரும்ப பெற வேண்டும் என கடுமையாக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.

மேலும் கடந்த ஜூன் மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக 44வது பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். உயர்கல்வித்துறையின் எதிர்ப்பை மீறி பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனின் பதவி நீட்டிக்கப்பட்ட நிலையில் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். அமைச்சர் பொன்முடியைப் போலவே பொன்முடியை உயர் கல்வித் துறை அதிகாரிகளும் புறக்கணித்த நிலையில், தற்போது மீன்வள பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவையும் தமிழக அரசு புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நாகப்பட்டினம் சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆளுநர் ரவி, உலகப்புகழ் பெற்ற அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் பிரார்த்தனை செய்தார். தமிழ்நாடு மக்களின் நலனுக்காக ஆளுநர் அவரது மனைவியுடன் பிரார்த்தனை மேற்கொண்டதாக ராஜ் பவன் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications