கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல்... ஓராண்டு நினைவலைகள்
நாகை: டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களை ஒரே இரவில் புரட்டிப்போட்டு பேரழிவை ஏற்படுத்திய கஜா புயல் கரையை கடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 11-ம் தேதி சென்னையில் இருந்து 930 கி.மீ. தொலைவில் உருவான புயல் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து, 15ம் தேதி நள்ளிரவு நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது.
பொழுதுவிடிந்து பார்த்தால் கொத்து கொத்தாக கால்நடைகள் உயிரிழந்து கிடக்கின்றன, கட்டிடங்கள் உருக்குலைந்து காட்சியளித்தன, லட்சணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்து கிடந்தன.

ஆக்ரோஷம்
கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் புதிய புயல் உருவாகியுள்ளது என்றும், அதற்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். அந்தப் புயலின் வீரியத்தையும், ஆக்ரோஷத்தைம் அப்போது மக்கள் உணரவில்லை.

உருகுலைந்தன
நவம்பர் 11-ம் தேதி முதல் வங்கக்கடலில் மெல்ல மெல்ல நகரத்தொடங்கிய கஜா புயல், 15-ம் தேதி நள்ளிரவு, அதாவது 16-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது காற்றின் வேகம் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் இருந்தது. கஜா கரையை கடந்த அந்த ஒரு மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள் மொத்தமும் உருகுலைந்தன.

செய்தி நிறுவனம்
நாகை, திருவாரூர், தஞ்சை, உள்ளிட்ட மாவட்டங்களில் அடியோடு தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் உள்ளூர் செய்தியாளர்களால் சென்னையில் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு கள நிலவரத்தை கூட விவரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து செய்தி நிறுவனங்களும், சென்னையில் இருந்து குழுக்களை அனுப்பி வைத்து புயலின் தாக்கத்தை உலகம் அறிய கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

கண்ணீர் ஓலங்கள்
பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, வண்டுவாஞ்சேரி, சோழகன்குடிகாடு, அதிராமபட்டணம், உள்ளிட்ட பகுதிகளில் மற்ற இடங்களை காட்டிலும் புயலின் பாதிப்பு மிகக் கொடூரமாக இருந்தது. அந்தப் பகுதி மக்கள் கண்ணீரோடு ஓலமிட்டு அழுதது காண்போரை கலங்கச் செய்தது. இதையடுத்து அரசு சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிவாரணம் முகாம்கள் அமைக்கப்பட்டன.

வாழ்வாதாரம் பாதிப்பு
ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அந்த ஒரே இரவில் அடியோடு சாய்ந்து அதனை அரும்பாடுபட்டு வளர்த்தவர்களின் எதிர்கால கனவுகளையும் சாய்த்தது. ஒண்டுவதற்கு ஒரு குடிசை வைத்திருந்தவர்கள் நிலைமையை கேட்கவே தேவையில்லை, அவர்கள் நிற்கதியாய் தவித்த அந்த நேரத்தில் தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் பலர் பொருளாகவும், பணமாகவும், உணவாகவும், உதவி செய்தனர்.

பதைபதைப்பு
கஜா புயல் தாக்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அது குறித்து நம்மிடம் பேசிய வேதாரண்யம் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சிங்காரம் என்பவர், அந்த இரவை நினைத்தால் இப்போதும் நெஞ்சம் பதைபதைக்கிறது. எங்கள் தோப்பு இன்று காடாக உள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்த நிகழ்வை பற்றி பேச முடியவில்லை என உருகினார்.

உதவும் பண்பு
மனிதநேயத்துடன் உலகின் நாலா பாகங்களில் இருந்து தமிழர்கள் டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவி செய்தனர். அவர்களின் வாழ்வு புத்தொளி பெற தங்களால் முடிந்த காரியங்களை செய்தனர், இன்னும் செய்கின்றனர். இதனிடையே சோழகன் குடிகாடு கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கூறுகையில், ஓராண்டு நிறைவடைந்த நிலையில் கூட இன்னும் அரசிடம் இருந்து முழு நிவாரணத் தொகையோ, உதவியோ கிடைக்கவில்லை எனக் கூறினார்.

நினைவேந்தல்
இதனிடையே கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திருவாரூர், நாகை மாவட்டங்களில் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications