40 நாள் குழந்தையில் தத்துப்பிள்ளை! வளர்ப்புத் தாய் மறைவால் வாடும் தமிமுன் அன்சாரி! பின்னணி தகவல்!
நாகை: மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரியின் வளர்ப்புத் தாய் மரியம் பீவி உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிமுன் அன்சாரி 40 நாள் குழந்தையாக இருந்தபோது அவரை தத்தெடுத்து வளர்த்து சிங்கப்பூர் அழைத்துச்சென்று படிக்க வைத்தவர் மரியம்.
இதுமட்டுமல்லாமல் தத்துப்பிள்ளையான தமிமுன் அன்சாரியை சிங்கப்பூரில் நிரந்தரமாக குடியமர்த்தி அங்கு அவரை பெரும் தொழிலதிபராக உருவாக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டவர் மரியம்.

தமிமுன் அன்சாரி
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரியின் தாயாரான உம்மு சல்மாவின் உடன் பிறந்த சகோதரி தான் மரியம். இவருக்கு குழந்தைப்பேறு இல்லாததால் தனது தங்கை மகனான தமிமுன் அன்சாரியை, 40 நாள் குழந்தையாக இருந்தபோதே தத்துப்பிள்ளையாக தத்தெடுத்துக்கொண்டார். அத்துடன் அவரது கணவர் சாகுல் ஹமிது சிங்கப்பூரில் தொழில் செய்து வந்ததால் 40 நாள் குழந்தையாக இருந்தபோதே தமிமுன் அன்சாரியையும் சிங்கப்பூர் அழைத்துச்சென்றுவிட்டார் மரியம்.

வளர்ப்புத் தாய்
அங்கு சொந்தப்பிள்ளையை காட்டிலும் அதீத பாசத்துடன் தமிமுன் அன்சாரியை வளர்த்த மரியம், சிங்கப்பூரிலேயே அன்சாரியை படிக்கவும் வைத்திருக்கிறார். கல்லூரி படிப்பை முடித்த தமிமுன் அன்சாரிக்கு பொறுப்புடன் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த வளர்ப்புத்தாய் மரியம், சிங்கப்பூரிலேயே அவரை தொழிலதிபராக்க முனைந்திருக்கிறார். ஆனால் அரசியல் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிங்கப்பூரில் தொடர்ந்து தங்க தயங்கிய தமிமுன் அன்சாரி வளர்ப்புத் தாயை அழைத்துக்கொண்டு தமிழகம் திரும்பிவிட்டார்.

கட்சி நிகழ்ச்சிகள்
தமிமுன் அன்சாரியை பொறுத்தவரை தன்னை பெற்ற தாயை காட்டிலும் வளர்ப்புத்தாயார் மீதுதான் அதிக அன்பு கொண்டவர். வளர்ப்புத் தாய் மரியம், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு முழு நேரமாக இருந்து அவரை பராமரித்தது குறிப்பிடத்தக்கது.

இரங்கல்
இதனிடையே வளர்ப்புத் தாயை இழந்து வாடும் தமிமுன் அன்சாரிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு இடங்களில் இருந்தும் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் தமிமுன் அன்சாரியின் வளர்ப்புத்தாய் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக நாகை மாவட்டம் தோப்புத்துறைக்கு விரையத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications