வாட்ஸ் அப்பில் சாட்டிங்.. பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவருக்கு மறக்க முடியாத தண்டனை
நாகை: நாகை அருகே வாட்ஸ் அப்பில் சாட் செய்து கொண்டே அரசு பஸ் டிரைவர் பேருந்தை ஓட்டிச்செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. பயணிகளின் உயிரை மதிக்காமல் அலட்சியமாக பணிபுரிந்த அரசு பஸ் டிரைவரை சஸ்பெண்ட் செய்து அரசு போக்குவரத்து கழகம் நடவடிகை எடுத்துள்ளது.
தமிழகத்தில் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் அரசு பேருந்து சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை எடுக்காமல் பயணிகளுக்காக டிரைவர்களும் நடத்துநர்களும் சேவை செய்து வருவதை பார்க்க முடிகிறது.

ஆனால், ஒரு சில பேருந்து டிரைவர்களோ பயணிகளின் உயிரை துச்சமென மதித்து, செல்போனில் பேசிக்கொண்டே பஸ் ஓட்டுவது.. ரீல்ஸ் பார்த்துக்கொண்டே ஓட்டுவது.. என அலட்சியமாக செயல்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தாலும் திருந்தியபாடில்லை.
அண்மையில் கூட ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசு பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்று சில வாரஙக்ளே ஆகியிருக்கும் நிலையில், நாகை அருகே அரசு பஸ் டிரைவர் செய்த செயல் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்ட்டி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகளும் அதிக அளவில் இருந்தனர்.
இந்த பேருந்தை ஓட்டிய டிரைவர், ஒரு கையில் செல்போனை வைத்துக்கொண்டு ஒரு கையில் மட்டும் ஸ்டீயரிங்கை பிடித்து ஓட்டிச் சென்றார். சாலையில் கவனம் வைக்காமல் செல்போனில் வாட்ஸ் அப் சாட் செய்து கொண்டு சென்றதோடு, எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டும் அலட்சியாமாக பேருந்தை ஓட்டினர். இதைக்கவனித்த பேருந்தில் இருந்த பயணி ஒருவர், தனது செல்போனில் இந்தக் காட்சிகளை பதிவு செய்தார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பயணிகள் பலரும் டிரைவரின் அலட்சிய போக்குக்கு கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களிலும் வீடியோ பார்த்தவர்கள் இந்த டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட டிரைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து பணியாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நெல்லை அருகே உள்ள மூலக்கரைப்பட்டியில் மூட்டை முடிச்சுகளுடன் அரசு பஸ்சில் ஏற முயன்ற வயதான முதியவரை கண்டக்டர் கன்னத்தில் அறைந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக கன்னத்தில் அறைந்த கண்டக்டரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications