நாகை ECR பகுதியில் இரவில் விஏஓ கொலை செய்யப்பட்ட வழக்கில் ஷாக்.. 2 திருநங்கைகள் கைது!
நாகை: நாகை அருகே செல்லூர் கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில், வி.ஏ.ஓ சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். லஞ்சப் புகாரில் சஸ்பெண்ட் ஆன வி.ஏ.ஓ. ராஜா ராமன், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்று திரும்பிய நிலையில், மதுபோதையில் படுத்திருந்தபோது அங்கு வந்த திருநங்கைகள் ராஜாராமனின் முகத்தில் கல்லைப் போட்டு கொலை செய்து பணம், மோதிரம், செல்போனை எடுத்து தப்பியுள்ளனர்.
நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை செல்லூர் அருகே சாலையோரத்தில் தலையில் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு நேற்று (டிசம்பர் 8 ஆம் தேதி) காலை தகவல் வந்தது. இதன்பேரில் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட நபர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே வாழக்கரையை சேர்ந்த ராஜாராமன் (38), திருவாய்மூர் விஏஓவாக இருந்தவர் என்று தெரியவந்தது.

ராஜாராமன் கூடுதல் பொறுப்பாக எட்டுக்குடி விஏஓவாக பணியாற்றியபோது கடந்த 2024ல் ரூ.500 லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். இவர் லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜாராகி விட்டு காரைக்கால் அருகே கோட்டுச்சேரியில் வசிக்கும் மனைவி மனோசித்ரா, மகன் தஸ்வின்(8) ஆகியோரை பார்த்து விட்டு இரவு பைக்கில் வாழக்கரை திரும்பியபோதுதான் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் வந்த பைக் சாலையோரம் பூட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதும், அங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள வயல் பகுதியில் தலையில் இரண்டு கற்களை போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இரவு நேரத்தில் ராஜாராமன் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அப்பகுதியில் திருநங்கைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் அவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் கொலை செய்யப்பட்டாரா என தொடர்ந்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ராஜாராமன் மரணத்திற்கு இரண்டு திருநங்கைகள் காரணம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்று இரவு ராஜாராமன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த திருநங்கையர் நிவேதா, ஸ்ரீகவியை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தினர். ராஜாராமன் செல்லூரில் மது போதையில் படுத்திருந்தபோது பணம், செல்போன், மோதிரம் பறித்து கொண்டு அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு திருநங்கைகள் தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications