சிங்கப்பூரில் இருந்து வந்த கார்த்தி.. தேடி வந்த ராணுவ வீரர் பாலகுமாரன்.. கனவிலும் நினைக்காத சம்பவம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஏரிமேல்கரையை சேர்ந்த ராணுவ வீரர் பாலகுமாரன் என்பவரும், வேதாரண்யம் கீழசேது ராஸ்தாவை சேர்ந்த கார்த்தி என்பவரும் நண்பர்கள் ஆவர். சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கார்த்தி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதேபோல் ராணுவத்தில் வேலை பார்க்கும் பாலகுமாரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். சரக்கு வாகனத்தால் இப்போது இருவருமே உயிருடன் இல்லை. இதுபற்றி பார்ப்போம்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஏரிமேல்கரையை சேர்ந்த காமராஜ் என்வருடைய மகன் பாலகுமாரன்(வயது 27). ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அண்மையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம் கீழசேது ராஸ்தாவை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவருடைய மகன் கார்த்தி(31). கார்த்தி சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் இருந்து வந்த கார்த்தியும், ராணுவ வீரர் பாலகுமாரனும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் நாகப்பட்டினத்திற்கு சென்று விட்டு வேதாரண்யத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். தேத்தாக்குடி புது ரோடு அருகே வந்தபோது வேதாரண்யத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக அவர்களின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாலகுமாரன், கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்கள். இந்த விபத்து குறித்து வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற சரக்கு வாகனம் குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக போலீசார், விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை வேட்டைக்காரன் இருப்பு காவல் நிலையம் அருகே மடக்கி பிடித்து, அதனை ஓட்டியவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை அருகே உள்ள பொய்யூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன்(43) என்பது தெரிய வந்தது. விபத்தில் உயிரிழந்த பாலகுமாரன், கார்த்தி ஆகியோர் உடலை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைககு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த நண்பர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications