வலையை விரிச்சு வீசு.. மாட்டுறது மாட்டும்.. 'அண்ணன் நரிமுகத்துல முழிச்சிருப்பாரு போல'.. நீங்களே பாருங்க
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் பிடிப்பதற்காக வலையை விரித்த போது, அதில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நோட்டுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மீன் பிடிக்க வலை விரித்தால் சில நேரம் மீனோ மாட்டாது. ஆனால் வலையில் மீனுக்கு பதில் என்னென்னமோ மாட்டும்.இங்கு ஒருவருக்கு லட்சக்கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக சிக்கி உள்ளது. இது எப்படி சாத்தியமானது.. என்பது பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வேம்பனூர் பாசனக் குளத்தை தூர்வாரும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக குளத்திலிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதை பயன்படுத்தி வேம்பனூர் பகுதியைச் சேர்ந்தஇளைஞர்கள் சிலர் சனிக்கிழமை மதியம் குளத்தில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். மீனுக்காக அவர்கள் விரித்த வலையில் பிளாஸ்டிக் கவர் ஒன்றும் வந்தது.
அதில் சோதித்து பார்த்த போது கட்டுக் கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அந்த கவரை கரைக்கு கொண்டு வந்து பிரித்து பார்த்தபோது ரூபாய் நோட்டு கட்டுகள் மீது தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் லேபிள் கட்டப்பட்டு இருந்தது.
முழுமையாக நனையாமல் பாதி அளவு நனைந்து சேதமடைந்த நிலையில் மொத்தம் 20 கட்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் வேடிக்கை பார்க்க அங்கு திரண்டார்கள், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து இரணியல் போலீஸார் அங்கு வந்து ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

வருவாய்த் துறையினர் அந்த ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்த போது சிலவற்றில் சில்ட்ரன் பேங்க் ஆப் இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்ததால் குழப்பம் ஏற்பட்டது. குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதே நேரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் லேபிள் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டது.ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்வதற்காக வருவாய்த் துறையினர் எடுத்து சென்றனர். குளத்தில் மீன் பிடிக்க போனவர்கள் வலையில், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கியது நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications