ஜிம்மில் ஹெவி வொர்க்கவுட்.. சட்டென நெஞ்சை பிடித்து சரிந்த நகை வியாபாரி! கன்னியாகுமரியில் ஷாக்
நாகர்கோவில்: ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த நகை வியாபாரி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்த்தாண்டத்தின் பம்மல் பகுதியில் ஜிம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வழக்கமாக மாலை நேரங்களைவிட காலையில்தான் அதிக அளவில் இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வருவார்கள். அப்படித்தான் நேற்று காலையும் அனலின் எனும் நபர் ஒருவர் உடற்பயிற்சி செய்ய வந்திருக்கிறார். இவருக்கு சொந்த ஊர் கேரளாவின் திருச்சூர் மாவட்டமாகும். ஆனால், நகை வியாபாரம் செய்ய அடிக்கடி மார்த்தாண்டம் வந்து செல்வதால் இங்கு அனைத்து இடங்களும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் இதே போல நகை வியாபாரம் தொடர்பாக அவர் மார்த்தாண்டத்திற்கு வந்திருக்கிறார். உடற்பயிற்சியில் தீவிர ஆர்வம் கொண்ட இவர் பம்மல் பகுதியில் உள்ள ஜிம்முக்கு தினமும் காலையில் சென்று வந்திருக்கிறார். அப்படித்தான் நேற்று காலையும் சென்றிருக்கிறார். அங்கு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார்.
இதை பார்த்த உடனிருந்தவர்கள் அவரை தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சித்தனர். ஆனால் அனிலின் எழுந்திருக்கவில்லை. எனவே சந்தேகமடைந்த அவர்கள், அனலினை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜிம்முக்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் கிடைக்கும் அறிக்கையில் உண்மை தெரியவரும் என்று அவர்கள் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே இதே போல ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த சிலர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்ந்து வருகிறது.
தொடக்கத்திலேயே அதிக அளவு வொர்க்கவுட் செய்வது, பிரேக் எடுக்காமல் ஹெவி வொர்க்கவுட் செய்வது, இணை நோய் இருந்தும் போதிய மருந்துகள் எடுக்காமல் வொர்க்வுட்டில் ஈடுபடுவது, மருத்துவர்கள் அல்லது ஜிம் ட்ரெய்னர் இன்றி தானாக வொர்க்கவுட் செய்வது போன்றவை இதுபோன்ற திடீர் மரணங்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரியில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது அம்மாவட்ட இளைஞர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications