குடும்பத் தகராறு.. மனைவியை கத்தியால் குத்திய கணவர்.. மடக்கி பிடித்த மக்கள்.. நாகர்கோவிலில் ஷாக்!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் குடும்பத் தகராறு காரணமாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய கணவனை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த திருமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (35). மெடிக்கல் ரெப் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கும் பிள்ளைத்தோப்பு அழிக்கால் பகுதியை சேர்ந்த ஜோஷி (32) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு 5 வயதில் மகனும், 4 வயதில் மகளும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்து கடந்த ஒரு வருடமாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
ஜோஷி விவகாரம்
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜோஷி விவாகரத்திற்கு விண்ணப்பித்து சதீஷ்க்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அடிக்கடி குடித்துவிட்டு ஜோதியுடன் பிரச்சனை செய்து வந்துள்ளார்.
தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம்
மேலும் அவர் தற்போது தனது மெடிக்கல் ரெப் வேலையை விட்டுவிட்டு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகில் ஜோஷி வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனத்திற்கு சதீஷ் சென்றார்.
கத்திக் குத்து
பின்னர் அங்கு அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோஷியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். கத்தி குத்து அவரது இடது விலா எலும்பை துளைத்தது.
சரமாரி குத்து
இதனைத் தொடர்ந்து சதீஷ் தப்பி ஓட முயன்றார். இதனை பார்த்த பொதுமக்கள் சதீஷை சரமாரியாக தாக்கி பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு இருந்தவர்கள் ஜோஷியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு சதீஷ்டம் விசாரணை செய்து வருகின்றனர்.