தமிழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலாவதியான அரசு பேருந்துகள் இயக்கம்.. சிஐடியு புகார்
நாகர்கோவில்: தமிழகத்தில் அரசு பேருந்துகளின் நிலைமை படுமோசமாக உள்ளதாக சிஐடியு மாநில தலைவர் சவுந்தர்ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது இயக்கப்படும் அரசு பேருந்துகளில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் காலாவதியான நிலையில் தான் இயக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன் காரணமாகவே வடபழனியில் விபத்து ஏற்பட்டு இரு அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அரசு பேருந்துகளுக்கு போதிய உதிரி பாகங்கள் இல்லை. தொழிலாளர்களின் கடின உழைப்பால் தான் அரசு பேருந்துகள் தற்போது இயங்கி வருகின்றன.
கேரள மாநிலத்தை போல தமிழகத்திலும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து தொழிலதாளர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பேசிய சவுந்தர்ராஜன் அரசு போக்குவரத்து ஊழியர்களின் பணம் ரூ.8 ஆயிரம் கோடியை எடுத்து, பிற துறைகளுக்கு அரசு செலவழித்து வருகிறது.
ஆனால் போக்குவரத்து துறையோ தள்ளாட்டத்தில் உள்ளது. எனவே போக்குவரத்து கழகத்தை காப்பாற்ற பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும் . எனினும் இந்த முக்கிய கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
அதே போல அரசு பேருந்துகளை பராமரிக்க போதிய உதிரிபாகங்கள் வழங்கப்பட வேண்டும். தமிழக அரசின் முறைசாரா தொழிலாளர் நலவாரியத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்து, மாநிலம் முழுவதும் நலவாரியங்கள் அலுவலகங்கள் முன்பு வரும் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பண பலன்களுக்கன விண்ணப்பங்கள் தேங்கி கிடப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் தொழிற்சாலைகள் மற்றும் மோட்டார் தொழில்களில் சுமார் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே தொழிலாளர்களை பாதுகாக்க அரசு உரிய சட்டம் இயற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications