கடவுளே! வேலை கிடைத்தால் உயிரை தருவேன்.. ரயில் முன் பாய்ந்து வேண்டுதலை நிறைவேற்றிய வங்கி அதிகாரி
நாகர்கோவில்: வேலை கிடைத்தால் உயிரை தருவேன் என கடவுளிடம் வேண்டிக் கொண்ட வங்கி அதிகாரி ஒருவர் தனக்கு பணி கிடைத்தவுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் புத்தேரி ரயில்வே பாலம் அருகே நேற்று காலை இளைஞர் ஒருவர் சடலமாக இருந்தார். இதுகுறித்து தகவலறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த இளைஞரின் உடலை மீட்டனர்.
மேலும் அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் விசாரணையில் நாகர்கோவில் அருகே எறும்புக்காடு பத்தன்காடு பகுதியைச் சேர்ந்த செல்லசாமியின் மகன் நவீன் (32) என்பது தெரியவந்தது.

உதவி மேலாளர்
இவர் என்ஜீனியரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தார். இந்த நிலையில் மும்பையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் உதவி மேலாளராக நவீனுக்கு வேலை கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பைக்கு சென்று அந்த வங்கியில் பணிபுரிந்து வந்தார்.

தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன் தினம் மும்பையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட நவீன் திருவனந்தபுரம் வந்தார். அங்கிருந்து நாகர்கோவிலுக்கு வந்த அவர் புத்தேரி ரயில்வே பாலம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

கடிதம்
அவரது சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினார். அதில் தற்கொலைக்கான காரணத்தை அறிந்த போலீஸாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த கடிதத்தில் நவீன் கூறியிருக்கையில், நான் படித்துவிட்டு பல இடங்களில் வேலை தேடினேன். எனக்கு வேலையே கிடைக்கவில்லை.

கடன்
இந்த விரக்தியில் இருந்த நான் வேலை கிடைத்தால் கடவுளுக்கு நேர்த்திக் கடனாக என் உயிரை தருகிறேன் என வேண்டியிருந்தேன். இந்த நிலையில் எனக்கு வேலை கிடைத்துவிட்டது. அதனால் கடவுளுக்கு நேர்த்திக் கடனை நிறைவேற்றுவது எனது கடமை என்பதால் எனது உயிரை காணிக்கையாக்குகிறேன் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications