கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு.. தம்பதியை கைது செய்த நாமக்கல் போலீஸ்.. நடந்தது என்ன?
நாமக்கல்: நாமக்கல் அருகே வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த 11 வயது சிறுமி கடத்தப்பட்டதை அடுத்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் காளிச்செட்டிப்பட்டி ஊராட்சி, புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர். இவருக்கு 13 வயது மகனும், 11 வயது மகளும் உள்ளனர்.

நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இருவரும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வீட்டின் மேல் மாடியில் தாய், பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் அங்கு நுழைந்த முகமூடி அணிந்த மர்ம கும்பல், அவர்களை கத்தி முனையில் மிரட்டி நகைப் பறிப்பு ஈடுபட்டனர். மேலும் அங்கு வந்த மர்ம நபர்கள் தாயையும் சகோதரனையும் கட்டி போட்டு விட்டு சிறுமியை மட்டும் கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிறுமியின் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட எஸ் பி சாய்சரண் தேஜஸ்வி வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
இதனிடையே சிறுமியை கடத்திய கும்பல் சிறுமியின் தந்தைக்கு போன் போட்டு ரூ 50 லட்சம் கொடுத்தால் மகளை விட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இந்த நிலையில் புகாரின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சமூகவலைதளங்ளில் சிறுமியின் புகைப்படத்தை பதிவிட்டு தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கடத்தல் கும்பல் அலங்காநத்தம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சிறுமியை விட்டுவிட்டு அவரது பெற்றோருக்கு தகவல் அளித்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் ரூ 50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 11 வயது சிறுமியை மீட்டனர்.
இதையடுத்து சிறுமி அளித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களான மணிகண்டன்- பொன்னுமணி தம்பதியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமியை கடத்தியதற்கு ஏதேனும் முன் விரோதம் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications