மண்டையை பிளக்கும் வெயிலில் பிரச்சாரம்.. விஜய்யை பார்க்க வந்தவர்களில் 5 பேர் கவலைக்கிடம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரை பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் கூடியிருந்த நிலையில், சிலர் மயக்கமடைந்து விழுந்தனர். இதில் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
நாமக்கல்லில் பேச காலை 8.30 மணிக்கு விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரச்சார இடத்திற்கு 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்திருந்தார். மதியம் 3 மணியளவில் மண்டையை பிளக்கும் வெயிலில் விஜய் பேசிக்கொண்டிருந்த நிலையில், அவரை பார்க்க கூடியிருந்த கூட்டத்தில் 15 பேர் மயக்கமடைந்தனர். இவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அந்த வகையில் விஜய் மாவட்ட வாரியாக பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். திட்டமிட்ட நேரத்தை விட நீண்ட நேரம் தாமதமாக பிரச்சாரம் தொடங்கப்பட்டதால் நீண்ட நேரமாக வெயிலில் காத்திருந்த ரசிகர்கள், தொண்டர்கள் சோர்வடைந்தனர்.
நேரம் அதிகரிக்க, அதிகரிக்க கூட்டத்தில் சலசலப்புகள் எழுந்திருக்கின்றன. ஒரு வழியாக மதியம் போல நாமக்கல் வந்த விஜய் மக்கள் மத்தியில் பேச தொடங்கியிருக்கிறார். ஆனால், மறுபுறம் அவர்களில் சிலர் மயக்கம் போட்டு விழ தொடங்கியிருக்கின்றனர். மொத்தமாக 15 பேர் மயக்கமடைந்திருக்கின்றனர். கூட்ட நெரிசலில் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படும் என்று உணர்ந்த கட்சியினர், ஏற்கெனவே ஆம்புலன்ஸை தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள். ஆனால், மயக்கமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை கிடைக்கவில்லை.
தற்போது மயக்கமடைந்த 15 பேரும் மீட்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஏற்கெனவே மதுரையில் விஜய் மாநாடு நடத்தியிருந்தபோது பங்கேற்றிருந்த தொண்டர்கள் சிலர் விபத்துகளிலும், கூட்ட நெரிசலிலும் சிக்கி உயிரிழந்திருந்தனர். எனவே விஜய் பிரச்சாரத்திற்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் இந்த நிபந்தனைகள் பின்பற்றப்படாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications