ஒரே சான்ஸ்.. கூட்டணி வேணும்னா அதிமுக "தாமரை" சின்னத்தில் போட்டியிடணும்.! பாஜக கே.பி.ராமலிங்கம் பரபர
நாமக்கல்: அதிமுக பாஜக இடையேயான கூட்டணி தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், இது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் கூறியுள்ள தகவல்கள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக பாஜக இடையே கூட்டணி உருவானது. அதன் பிறகு இரு கட்சிகளும் தொடர்ச்சியாக லோக்சபா தேர்தல், சட்டசபைத் தேர்தல் எனப் பல தேர்தல்களை இணைந்து எதிர்கொண்டன.

இருப்பினும், இந்தக் கூட்டணிக்குப் பெரியளவில் வெற்றி கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதேபோல சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக தனது ஆட்சியைப் பறிகொடுத்தது.
இந்தச் சூழலில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணா மற்றும் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கூறிய கருத்துகள் சர்ச்சையானது. இதற்கு அதிமுக தரப்பில் இருந்து வலுவான எதிர்ப்பும் வந்தது. தொடர்ந்து கடந்த செப். மாதம் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.
இருப்பினும், மீண்டும் பாஜக உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக தலைவர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் கூறிய கருத்துகள் பேசுபொருள் ஆகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பாஜக ராசிபுரம் தொகுதி அலுவலக திறப்பு விழா நடைபெற்ற நிலையில், அதில் சிறப்பு விருந்தினராக கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டார். ராசிபுரம் தொகுதி அலுவலகத்தைத் திறந்து வைத்த அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், "டெல்லியில் இப்போது விவசாயிகள் போராட்டம் தேவையில்லாமல் நடத்தப்படுகிறது. இதற்குப் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கிறது. கோரிக்கைகள் எதுவுமே இல்லாமல் போராட்டத்தை நடத்துகிறார்கள்.
அரசியலில் பரபரப்பைக் கிளப்ப வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். அங்கே எதாவது உயிரிழப்பு ஏற்படுமா.. சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுமா.. அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காத்துக் கிடக்கிறார்கள். குறிப்பாக திமுகவும் அதைத்தான் செய்கிறார்கள்" என்று அவர் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து திமுகவை விமர்சித்த அவர்.. திமுக இப்போது சட்டசபையை மிக மோசமாக நடத்துவதாகவும் இன்று உள்ள ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்எல்ஏக்கள் மோசமாக நடந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
FACT CHECK: என்னது..தமிழக அரசு பெட்ரோலுக்கு ரூ.54 வரி வசூலிக்கிறதா? பாஜக ராமலிங்கம் சொன்னது உண்மையா?
அப்போது லோக்சபா தேர்தலுக்காக அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "கூட்டணி இல்லை என்று அவர்களும் சொல்லிவிட்டார்கள். நாங்களும் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டோம். தமிழ்நாடு முழுக்க பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம்..
அவர்கள் தாமரை சின்னத்தில் நின்றால் சேர வாய்ப்பு இருக்கிறது. அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அதிமுக தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும்" என்றார். கே பி ராமலிங்கத்தின் இந்த பேட்டி இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications