எடப்பாடி, ஓபிஎஸ் வேண்டாம்.. "சீனியர்" இருக்காரே.. கட்சிக்குள் திடீர் குண்டு போட்ட நாஞ்சில் சம்பத்!
நாமக்கல் : அதிமுகவின் சீனியர் செங்கோட்டையன் தான், அவர்தான் அக்கட்சியின் தலைவர் ஆக வரவேண்டும் என நாஞ்சில் சம்பத் புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான மோதல் போக்கு நிகழ்ந்து வருவது அரசியல் அரங்கை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் , மூத்த நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இருக்கும் நிலையில், அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு கட்சியை கைப்பற்றத்துடிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு சாப விமோசனம் கிடையாது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத் போட்ட அந்த ஒரு ட்வீட்! பரபரப்பான காவல்துறை! பதறித்துடித்து விசாரிக்கும் அன்பர்கள்!
திராவிட மாடல்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது. திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இந்த விழாவுக்கு தலைமை தாங்கிப் பேசினார். நாஞ்சில் சம்பத் பேசுகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை கொண்டு வந்தது, ஸ்டாலின் உத்தரவின்படி கீழடியில் அகழ்வாராய்ச்சியை ஊக்குவித்தது உள்ளிட்ட தி.மு.க அரசின் பல்வேறு சாதனைகள் குறித்தும், வரலாறு குறித்தும் பேசினார்.
அத்துமீறும் எடப்பாடி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், "மாவட்ட செயலாளர்களை தன் வசப்படுத்திக் கொண்டு, அஜெண்டா இல்லாமல் தனது அடியாட்களை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேச வைத்து, ஒற்றைத் தலைமை என்று எடப்பாடி பழனிசாமி அத்துமீறுகிறார். எம்.ஜி.ஆருக்கே அறிமுகம் இல்லாத ஒரு இடைசெருகல் அந்த கட்சியை கைப்பற்ற துடிக்கிறது. அந்த கட்சிக்குள் பூகம்பம் வெடித்து இருக்கிறது.
பாஜகவின் பலிகடா
கட்சியின் அதிகார பூர்வமான ஒருங்கிணைப்பாளரை கட்சியை விட்டு நீக்கி, அதிமுகவை கைப்பற்றும் நடவடிக்கைக்கு ஆயத்தமாகி வருகிறார் என்றால் இந்த செயலுக்கு பின்னால் பா.ஜ.க தான் உள்ளது. வலிமை வாய்ந்த கட்சியை உருக்குலைத்து, அந்த இடத்தில் உட்கார்ந்துகொள்ள நினைக்கும் பாஜகவின் நரித்தனத்திற்கு இன்று பழனிசாமி பலிகடாவாகி இருக்கிறார்.
ஒற்றைத் தலைமை
கடந்த 10 நாட்களுக்கு முன் ஒற்றை தலைமையா? அதெல்லாம் கிடையாது என்று வித்தாரம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. ஒற்றைத் தலைமை என்ற பேச்சையே புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிமுகவை கைப்பற்றத் துடிக்கிறார். இந்தச் செயலுக்கு பின்னால் பாஜகதான் உள்ளது.
செங்கோட்டையன்
மூத்த நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இருக்கும் நிலையில், அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு அதிமுகவை கைப்பற்றத் துடிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு சபா விமோசனமே கிடையாது. கட்சி உடையாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கட்சியின் சீனியர் செங்கோட்டையன் தான். அவர்தான் தலைவர் ஆக வரவேண்டும்." எனப் பேசியுள்ளார்.